பேரம்பாக்கம் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை - கணவர், மாமியார் மீது போலீசில் புகார்


பேரம்பாக்கம் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை - கணவர், மாமியார் மீது போலீசில் புகார்
x

பேரம்பாக்கம் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக கூறி கணவர், மாமியார் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் கொட்டையூர் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 35). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் காஞ்சீபுரம் மாவட்டம் குன்னத்தூர் கெளுத்திப்பேட்டை, அண்ணா தெருவை சேர்ந்த மஞ்சு மாதா (27) என்பவரை கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியருக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு காரணமாக சண்டை ஏற்பட்டு வந்தது. மேலும் ராஜசேகரனின் தாயார் செல்வியும் அடிக்கடி மஞ்சுமாதாவை தகாத வார்த்தையால் பேசி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 10-ந் தேதியன்று மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு முற்றவே, கடும் ஆத்திரம் அடைந்த ராஜசேகர் தனது மனைவி மஞ்சு மாதாவை 'நீ மண்எண்ணெய் ஊற்றி கொளுத்தி கொண்டு சாவு' எனக்கூறி திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மஞ்சுமாதாவை சமையலறையில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து தன் உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதையடுத்து பலத்த தீக்காயமடைந்த மஞ்சுமாதாவின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து அவரை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மஞ்சுமாதா நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

இந்த சம்பவம் தொடர்பாக தனது மகளை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ராஜசேகர், மாமியார் செல்வி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மஞ்சுமாதாவின் தாய் செல்வி மப்பேடு போலீசில் புகார் கொடுத்தார். இது சம்பந்தமாக போலீசார் ராஜசேகர், செல்வி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

சென்னை, மணலி ஹரி கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிசங்கர். வெல்டர். இவரது மகள் ராஜ ஸ்ரீ (வயது 15). இவர் மணலி பாடசாலை தெருவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது 10-ம் வகுப்புக்கு அரசு பொது தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று மாணவியின் பெற்றோர் திருவொற்றியூரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்று விட்டனர்.

இந்த நிலையில் கணக்கு பாடம் வராததால் அச்சத்தில் இருந்த மாணவி ராஜஸ்ரீ, பெற்றோர் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றவுடன் சமையல் அறையில் இருந்த மண்எண்ணையை தன் உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். உடல் முழுவதும் தீ பற்றியதும் வலியால் அலறி துடித்த மாணவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மாணவி ராஜ ஸ்ரீ பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மணலி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி தேர்வுக்கு பயந்து தீக்குளித்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.


Next Story