நான் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதற்கு இளைஞர் அணிதான் காரணம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


நான் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதற்கு இளைஞர் அணிதான் காரணம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 21 Jan 2024 4:08 AM GMT (Updated: 21 Jan 2024 9:33 AM GMT)

திமுகவிற்கு புதிய ரத்தம் பாய்ச்சுவதற்கு இளைஞர் அணிதான் அடித்தளம் அமைத்தது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சேலத்தில் திமுக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு நடைபெற்று வரும் நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

நான் வளர்ந்த, என்னை வளர்த்துவிட்ட, நான் உருவாக்கிய, என்னை உருவாக்கிய பாசறைதான் இளைஞர் அணி. அடக்கமாக, அமைதியாக, ஓய்வின்றி உழைக்கிறேன் என நீங்கள் என்னை பாராட்டுகிறீர்கள் என்றால், அதற்கான களத்தை அமைத்துக் கொடுத்தது இளைஞர் அணிதான். தமிழ்நாட்டில் என் கால்படாத இடங்களே இல்லை என சொல்லும் அளவிற்கு பயணம் செய்தேன். திமுகவிற்கு புதிய ரத்தம் பாய்ச்சுவதற்கு இளைஞர் அணிதான் அடித்தளம் அமைத்தது.

நான் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதற்கு காரணமே இளைஞரணிதான். ஆற்றல் மிக்க இளைஞர்கள் என்னை சுற்றி இருப்பதால்தான் நான் சுறுசுறுப்பாக இருக்கிறேன். தற்போது இளைஞரணியை வழிநடத்த உங்களுக்கு உதயநிதி கிடைத்துள்ளார். அவரை இறுகப்பற்றிக்கொள்ளுங்கள். அவர் பொறுப்புக்கு வந்த கொஞ்ச காலத்திலேயே அசைக்க முடியாத கோட்டையாக இளைஞர் அணியை கட்டி எழுப்பி வருகிறார்.

வலிமையான கொள்கை, உறுதியான பிடிப்பு, இனிமையான பரப்புரை, தொடர்ச்சியான உழைப்பு இவையனைத்தும் உதயநிதி ஸ்டாலினிடம் இயல்பாகவே இருப்பவை. கலைஞர் எங்கள் மீது வைத்த நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றியது போல, என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, வெற்றிப்படையாக செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story