சீனாவில் சூறாவளி: பலி எண்ணிக்கை 49 ஆக உயர்வு


சீனாவில் சூறாவளி: பலி எண்ணிக்கை 49 ஆக உயர்வு
x
தினத்தந்தி 13 Aug 2019 6:53 AM GMT (Updated: 13 Aug 2019 6:53 AM GMT)

கிழக்கு சீனாவில் சூறாவளிக்கு பலியானோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.

பிஜீங், 

கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் எற்பட்ட சூறாவளி மற்றும் நிலச்சரிவு காரணமாக  பலி எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது மற்றும் 21 பேர் மாயமாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம், சீனாவை தாக்கிய இந்த சூறாவளிக்கு ‘லெக்கிமா’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த சூறாவளியானது 3-ஆம் வகை வலிமை மிக்க சூறாவளியாக கூறப்படுகிறது, இது சமம்வெல்னிங், ஷான்டோங் மற்றும் லியோனிங் நகரத்தை தாக்கியது.

ஷான்டோங் மாகாணத்தில் 1952 ஆம் ஆண்டிற்கு பிறகு பதிவான மழைப்பொழிவுகளில், இந்த வார இறுதியில் பதிவான மழைப்பொழிவே மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மாகாண வெள்ள தலைமையகத்தின் படி ஏறக்குறைய 1.26 மில்லியன் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர் எனவும், ஜெஜியாங்கில் 6.68 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சூறாவளி  காரணமாக 234,000 ஹெக்டர் பயிர்கள் மற்றும் 34,000 வீடுகள் சேதமடைந்தன. மீட்பு குழுக்கள் மூலம் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. மேலும், 3.7 பில்லியன் டாலர் நேரடி பொருளாதார இழப்பை அந்நாடு சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஷான்டோங்கில், திங்கள்கிழமை காலை நிலவரப்படி 5 பேர் பலியானதாகவும் மற்றும் 7 பேரைக் காணவில்லை எனவும், 1.66 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் 183,800 மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர் என்று மாகாண அவசரநிலை மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

இந்த சூறாவளி வடக்கு நோக்கி நகர்ந்து,  லியோனிங் மாகாணத்தை பாதித்ததால் 106,000 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர், 28  ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன மற்றும் அனைத்து முக்கிய சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன.

சூறாவளி காரணமாக சீனாவில் சுமார் 3,200 விமானங்கள் மற்றும் 127 ரெயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story