இந்தோனேசியாவில் நீர்மூழ்கிக் கப்பலில் 53 வீரர்கள் மரணம்: வீரர்கள் கடைசியாக பாடிய பாடல் வீடியோ வெளியீடு


இந்தோனேசியாவில் நீர்மூழ்கிக் கப்பலில் 53 வீரர்கள் மரணம்: வீரர்கள் கடைசியாக பாடிய பாடல் வீடியோ வெளியீடு
x
தினத்தந்தி 28 April 2021 10:09 AM GMT (Updated: 28 April 2021 10:09 AM GMT)

இந்தோனேசியாவில் 53 கப்பற்படை வீரர்கள் மரணம் அடைந்த சில வாரங்களுக்கு முன்பு, வீரர்கள் கடைசியாக பாடிய பாடல் இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ஜகார்த்தா, 

இந்தோனேசியா நாட்டின் கடற்படைக்கு சொந்தமான, கே.ஆர்.ஐ. நங்கலா-402 நீர்மூழ்கிக்கப்பல் கடந்த புதன்கிழமை பாலித்தீவின் வட பகுதியில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது மாயமானது. இந்த கப்பலில் மொத்தம் 53 மாலுமிகள் இருந்தனர்.

இதையடுத்து இந்தோனேசிய கடற்படை நீர்மூழ்கி கப்பல் மாயமானதாக அறிவித்து தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டது. 6 போர்க்கப்பல்கள் உள்பட 20 கப்பல்கள், 4 விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் ஆகியவை தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டன. இதுதவிர ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் மீட்பு பணியில் இறங்கின. 

இந்த நிலையில் மாயமான நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்கி விட்டதாக இந்தோனேசிய கடற்படை அறிவித்தது. காணாமல் போன நீர்மூழ்கிக்கப்பல், மூழ்கியதாக கருதப்படுகிற இடத்தில் இருந்து, கப்பலின் சில பொருட்களை மீட்புக்குழுவினர் கண்டெடுத்ததை தொடர்ந்து இந்தோனேசிய கடற்படை இவ்வாறு அறிவித்தது.

நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்கு உள்ளானதில் 53 கப்பற்படை வீரர்கள் உயிரிழந்த நிலையில், அவர்கள் கடைசியாக பாடிய பாடல், சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. குழுவாக அமர்ந்து, டில் வீ மீட் அகெய்ன் எனும் பாடலை, உயிரிழந்த வீரர்கள், உற்சாகத்துடன் பாடி உள்ளனர். இந்தக் காட்சிகளை பலரும் தற்போது உருக்கத்துடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர் .


Next Story