உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்து மக்கள் “சுதந்திரமாக” வெளியேறலாம் - ரஷிய ராணுவம் அறிவிப்பு


உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்து மக்கள் “சுதந்திரமாக” வெளியேறலாம் - ரஷிய ராணுவம் அறிவிப்பு
x
தினத்தந்தி 28 Feb 2022 8:28 AM GMT (Updated: 28 Feb 2022 8:28 AM GMT)

போர் விமான தாக்குதல் எச்சரிக்கை ஒலி நிறுத்தப்பட்டதுடன், ஊரடங்கு நீக்கப்பட்டநிலையில் ரஷிய ராணுவம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கீவ்,

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடர்ந்து ஐந்தாவது நாளாக தாக்குதலை நடத்தி வந்தது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் ரஷியா- உக்ரைன் படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்றது.  இதனிடையே 5வது நாளாக போர் தீவிரமடைந்தநிலையில், இதுவரை  14 குழந்தைகள் உட்பட, 352 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 116 குழந்தைகள் உட்பட 1,684 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. ஆனால் உக்ரைனின் ஆயுதப்படையினரின் உயிரிழப்புகள் குறித்து எந்த தகவலையும் உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவிக்கவில்லை.

இந்த சூழலில் உக்ரைன் மீது ரஷிய ராணுவம் நடத்தும் தாக்குதலின் தீவிரம் குறைந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்திருந்தது. இதன்படி உக்ரைனின் கார்கிவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலி நிறுத்தப்பட்டது. மேலும் பெலாரசில் ரஷியா-உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை இன்று தொடங்கும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்து மக்கள் சுதந்திரமாக வெளியேறலாம் என்று ரஷிய ராணுவம் அறிவித்துள்ளது. இதன்படி நகரத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் கிவ்-வாசில்கிவ் நெடுஞ்சாலை வழியாக ‘சுதந்திரமாக’ வெளியேறலாம் என்றும், இந்த பாதை மக்களுக்காக திறக்கப்படுவதுடன், மிகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கும் என்று ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.

போர் விமான தாக்குதல் எச்சரிக்கை நிறுத்தப்பட்டதுடன், ஊரடங்கு நீக்கப்பட்டநிலையில் ரஷிய ராணுவம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Next Story