கீவ் அருகே படைகளை குறைக்க ரஷியா சம்மதம்: புதின் - ஜெலன்ஸ்கி விரைவில் சந்திக்க வாய்ப்பு


Image Courtesy: AFP
x
Image Courtesy: AFP
தினத்தந்தி 29 March 2022 1:12 PM GMT (Updated: 29 March 2022 1:12 PM GMT)

உக்ரைன் - ரஷியா இடையே துருக்கியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

கீவ்,

உக்ரைன் மீது ரஷியா 34-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. 

பெலாரஸ் நாட்டில் உக்ரைன் - ரஷியா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே துருக்கியில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. துருக்கி அதிபர் தாயூப் எர்டோகன் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையின் போது உக்ரைனின் கீவ் நகர் அருகேயும், ஜெர்னிகிவ் நகரிலும் படைகளை குறைக்க ரஷியா சம்மதம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த பேச்சுவார்த்தை அர்த்தமுள்ள வகையில் இருந்ததாக பேச்சுவார்த்தைக்குழுவில் இடம்பெற்றிருந்த ரஷிய அதிகாரிகள் தெரிவித்தனர். 

பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ரஷிய அதிபர் புதின் - உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி விரைவில் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக உக்ரைன் பேச்சுவார்த்தைக்குழுவில் இடம்பெற்றிருந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் - ரஷியா இடையேயான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் 34 நாட்களாக நடைபெற்று வரும் போர் விரைவில் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.   

Next Story