செர்னொபெல் அணு உலை பகுதியில் இருந்த உக்ரைன் வீரர்களை பிணை கைதிகளாக பிடித்து சென்ற ரஷிய படையினர்...!


Image Courtesy: AFP
x
Image Courtesy: AFP
தினத்தந்தி 1 April 2022 5:32 AM GMT (Updated: 1 April 2022 5:32 AM GMT)

செர்னொபெல் அணு உலை பகுதியில் இருந்த தங்கள் நாட்டு வீரர்களை ரஷிய படையினர் பிணைக்கைதிகளாக பிடித்து சென்றுள்ளதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.

கீவ்,

உக்ரைன் மீது ரஷியா 37-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகங்களில் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

ரஷிய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளன.  

இதற்கிடையில், உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள பிரிப்யாட் நகர் அருகே செர்னொபெல் என்ற இடத்தில் அணு உலையை கடந்த சில நாட்களுக்கு முன் ரஷிய படைகள் கைப்பற்றின.

செர்னொபெல் அணு உலையில் கடந்த 1986 ஆம் ஆண்டு விபத்து ஏற்பட்டது. மனித குல வரலாற்றில் மிகவும் கொடூரமான அணு உலை விபத்தாக அது கருதப்படுகிறது. அந்த விபத்துக்கு பின் பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த செர்னொபெல் அணு உலை ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் 2015-ம் ஆண்டு மீண்டும் செயல்பட்டுக்கு வந்தது. 

அந்த அணு உலை ரஷிய படையினரின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. போர் நடைபெற்று வரும் சூழ்நிலையில் அணு உலை மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இதனால், அணு கசிவு ஏற்படலாம் என்ற அச்சமும் ஏற்பட்டது.

ஆனால், உக்ரைன் - ரஷியா இடையே துருக்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து படைகளை குறைக்க ரஷியா முன்வந்தது. இதன் தொடர்ச்சியாக செர்னொபெல் அணு உலை பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ரஷிய படைகள் தற்போது அங்கிருந்து பின்வாங்கியுள்ளன.

இந்நிலையில், செர்னொபெல் அணு உலையில் இருந்து பின்வாங்கியபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உக்ரைன் பாதுகாப்பு படையினரை ரஷிய படையினர் பிணைக்கைதிகளாக பிடித்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி 24-ம் தேதி முதல் தங்கள் படையினரை ரஷிய படையினர் பிணைக்கைதிகளாக வைத்திருந்ததாகவும், தற்போது படையினரை தங்களுடன் அழைத்து சென்றுவிட்டதாகவும் ரஷிய படையினர் மீது உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.  

Next Story