'பெண்கள் வேலைக்குச் செல்வதை 95 சதவீத ஆப்கான் மக்கள் விரும்பவில்லை' - தலீபான் துணை மந்திரி பேச்சு


பெண்கள் வேலைக்குச் செல்வதை 95 சதவீத ஆப்கான் மக்கள் விரும்பவில்லை - தலீபான் துணை மந்திரி பேச்சு
x

Image Courtesy : AFP

ஆப்கானிஸ்தானில் கணவனை இழந்த சுமார் ஆயிரம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஹக்பின் தெரிவித்துள்ளார்.

காபுல்,

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு அங்கு பெண்களின் சுதந்திரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. குறிப்பாக கல்வி, பொதுப்பணிகள், என்.ஜி.ஓ., செய்தி வாசிப்பு உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் ஈடுபட பெண்களுக்கு தலீபான் அரசு அனுமதி மறுத்துள்ளது.

இந்த நிலையில் பெண்கள் வேலைக்குச் செல்வதை 95 சதவீத ஆப்கான் மக்கள் விரும்பவில்லை என தலீபான் அரசின் பொதுப்பணிகள் துறை துணை மந்திரி தீன் முகமது ஹக்பின் தெரிவித்துள்ளார். பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டும் என வெறும் 5 சதவீத மக்களே கூறி வருவதாகவும், அவர்கள் வெளிநாட்டினரால் தூண்டப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதே சமயம் இஸ்லாமிய அமீரக தலைவர் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் ஆப்கானிஸ்தானில் கணவனை இழந்த சுமார் ஆயிரம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஹக்பின் தெரிவித்துள்ளார். மேலும், ஒவ்வொரு நாட்டிற்க்கும் ஒவ்வொரு கலாச்சாரம், மதம் மற்றும் சட்டங்கள் உள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர், மேற்கத்திய நாடுகள் தங்கள் சட்டங்களை ஆப்கானிஸ்தான் மீது திணிக்கக் கூடாது என்று தீன் முகமது ஹக்பின் கூறியுள்ளார்.


Next Story