இம்ரான்கானின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு - பாகிஸ்தான் கோர்ட்டு உத்தரவு


இம்ரான்கானின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு - பாகிஸ்தான் கோர்ட்டு உத்தரவு
x

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்து அந்த நாட்டின் கோர்ட்டு உத்தரவிட்டது.

லாகூர்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடந்த 9-ந் தேதி தன் மீதான ஊழல் வழக்கு விசாரணைக்காக இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் ஆஜராக சென்றிருந்தபோது அந்த நாட்டின் துணை ராணுவம் அவரை கைது செய்தது. இம்ரான்கானின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். ராவல்பிண்டி நகரில் உள்ள ராணுவ தலைமையகத்தை சூறையாடிய இம்ரான்கான் ஆதரவாளர்கள் லாகூர் நகரில் உள்ள மூத்த ராணுவ அதிகாரியின் வீட்டுக்கு தீவைத்தனர்.

இதனையடுத்து பஞ்சாப் மாகாண போலீசார் இம்ரான்கான் மீதும், அவரது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் மீதும் கொலை, பயங்கரவாதம் உள்பட 20-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி பல்வேறு வழக்குகளை பதிவு செய்தனர். இதனிடையே ஊழல் வழக்கில் கைதான இம்ரான்கானை இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு ஜாமீனில் விடுதலை செய்தது. அதனை தொடர்ந்து பஞ்சாப் மாகாணத்தில் தனக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் வழங்க கோரி லாகூர் ஐகோர்ட்டில் இம்ரான்கான் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இம்ரான்கான் ஏன் நேரில் ஆஜராகவில்லை என அவரது வக்கீலிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த இம்ரான்கானின் வக்கீல், குறிப்பிட்ட நேரத்துக்கு அவர் கோர்ட்டுக்கு வருவார் என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட அரசு தரப்பு வக்கீல் கோர்ட்டில் ஆஜராகாத இம்ரான்கானுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டர். இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் இம்ரான்கானின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.


Next Story