கனடா: மனைவியை கொலை செய்துவிட்டு தாய்க்கு வீடியோ கால் செய்த நபர்


கனடா: மனைவியை கொலை செய்துவிட்டு தாய்க்கு வீடியோ கால் செய்த நபர்
x
தினத்தந்தி 19 March 2024 5:28 AM GMT (Updated: 19 March 2024 5:42 AM GMT)

பஞ்சாப்பில் உள்ள தனது தாயிடம் வீடியோ காலில் பேசிய ஜக்பிரீத் சிங், தனது மனைவியை கொலை செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

ஒட்டாவா,

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஜக்பிரீத் சிங்-பல்வீந்தர் கவுர் தம்பதிக்கு கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கனடாவில் படித்து வரும் தனது மகளுடன் பல்வீந்தர் கவுர் வசித்து வந்துள்ளார்.

அதே சமயம் ஜக்பிரீத் சிங் வேலையில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனது மனைவி மற்றும் மகளை பார்க்க அவர் கனடா சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 15-ந்தேதி ஜக்பிரீத் சிங், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள தனது தாயிடம் வீடியோ கால் மூலம் பேசியுள்ளார்.

அப்போது அவர் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கனடா போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அங்கு உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த பல்வீந்தர் கவுரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பல்வீந்தர் கவுர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஜக்பிரீத் சிங்கை கனடா போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து ஜக்பிரீத் சிங்கின் குடும்பத்தினர் கூறுகையில், அவர்கள் இருவரும் மகிழ்ச்சியான தம்பதியாக இருந்து வந்ததாகவும், இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.


Next Story