ரஷியா-உக்ரைன் போர் எதிரொலி; இயற்கை எரிவாயு நெருக்கடியை எதிர்கொள்ளும் ஜெர்மனி


ரஷியா-உக்ரைன் போர் எதிரொலி; இயற்கை எரிவாயு நெருக்கடியை எதிர்கொள்ளும் ஜெர்மனி
x

போர் காரணமாக எரிபொருட்களின் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், இயற்கை எரிவாயு சப்ளையை ரஷியா குறைத்துள்ளது.

பெர்லின்,

ரஷியா-உக்ரைன் போர் காரணமாக சர்வதேச அளவில் எரிபொருள் ஏற்றுமதி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரஷியாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருள், உணவு உள்ளிட்ட பொருட்களை சார்ந்து இருக்கும் நாடுகள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கும் ஜெர்மனி, இயற்கை எரிவாயு நெருக்கடியை எதிர்கொள்வதாகவும், பல்வேறு நாடுகளுக்கான எரிபொருள் விநியோகத்தை ரஷியா குறைத்த பின்னர், குளிர்காலத்திற்கான சேமிப்பு மிகவும் குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஜெர்மனியில் தொழில்துறை நிறுவனங்கள் தாங்கள் பயன்படுத்தும் இயற்கை எரிவாயுவின் அளவைக் குறைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த வாரம் முதல் உக்ரைன் போர் காரணமாக எரிபொருட்களின் விலைகள் உயர்ந்து, இயற்கை எரிவாயு சப்ளையை ரஷியா குறைத்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஜெர்மனி அரசு கூறியுள்ளது.

மேலும் ரஷியாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையே எரிபொருள் வர்த்தக பிரச்சனை நீடிப்பதால், ஜெர்மனியும் பிற நாடுகளும் நிலக்கரிக்கு திரும்புகின்றன. இது, ஐரோப்பாவில் பருவநிலை இலக்குகளை அடைவதற்கு அச்சுறுத்தலாக உள்ளது. நம்மால் இன்னும் உணர முடியாவிட்டாலும், நாம் இப்போது எரிவாயு நெருக்கடியில் இருக்கிறோம் என அந்நாட்டின் ஆற்றல்துறை மந்திரி ராபர்ட் ஹாபெக் தெரிவித்துள்ளார்.


Next Story