உக்ரைனுக்கு ஆதரவாக போர்புரிய பீரங்கிகள், கவச வாகனங்களை அனுப்ப பிரான்ஸ் முடிவு


உக்ரைனுக்கு ஆதரவாக போர்புரிய பீரங்கிகள், கவச வாகனங்களை அனுப்ப பிரான்ஸ் முடிவு
x

உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக போர் புரிவதற்கான பீரங்கிகள் மற்றும் கவச வாகனங்களை அனுப்ப பிரான்ஸ் அரசு முடிவு செய்து உள்ளது.

கீவ்,

நேட்டோவில் இணையும் உக்ரைனின் முடிவுக்கு எதிராக அந்நாடு மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரியில் படையெடுத்தது. இந்த போரால், இரு தரப்பிலும் பலர் உயிரிழந்து உள்ளனர். இதுதவிர்த்து, போரின் தாக்கம் உலக நாடுகளிலும் எதிரொலித்தது.

போரை முடிவுக்கு கொண்டு வரும் அமைதி பேச்சுவார்த்தைக்கான முயற்சி தோல்வி அடைந்த சூழலில், போர் தீவிரமடைந்து உள்ளது.

போருக்கு வேண்டிய ஆயுதங்கள் மற்றும் நிதி உதவிகளை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் கவனித்து கொள்கின்றன. போரை ஊக்குவிக்கும் மறைமுக நடவடிக்கையாக பார்க்கப்பட்ட போதிலும், உக்ரைனும் ஆயுதங்களை பெற்று கொண்டு ரஷியாவை எதிர்த்து வருகிறது.

இந்த சூழலில், ரஷியாவின் ஆதிக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்றும் நோக்கில் பல்வேறு நாடுகளிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உதவிகளை கோரி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, ஐரோப்பிய யூனியனில் உள்ள பல்வேறு பெரிய நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இதன்படி, பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகருக்கு நேற்று மாலை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சென்றார். அவர், அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானை எலிசீ அரண்மனையில் சந்தித்து பேசினார். இதன்பின்னர், இரவு விருந்திலும் கலந்து கொண்டார்.

இந்த நிலையில், உக்ரைனுக்கு வேண்டிய ஆயுதங்களை வழங்கும் அறிவிப்பை பிரான்ஸ் அதிபர் வெளியிட்டார். உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக போர் புரிவதற்காக, கூடுதலாக இலகுரக பீரங்கிகள் மற்றும் கவச வாகனங்களை அனுப்ப பிரான்ஸ் அரசு முடிவு செய்து உள்ளது.

இவற்றில், ஏ.எம்.எக்ஸ்.-10ஆர்.சி. ரக பீரங்கிகளும் அடங்கும். அவை போர்களத்தில் விரைவாக இயங்க கூடியவை. ஓரிடத்தில் இருந்து தனது நிலையை எளிதில் மாற்றும் திறன் பெற்றவை. உக்ரைனிய படைகளுக்கு அவற்றை எப்படி இயக்க வேண்டும் என்பதற்கான பயிற்சிகளையும் பிரான்ஸ் வழங்க இருக்கிறது.

இரு நாட்டு தலைவர்களும் 3 மணிநேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் இன்று அளித்த கூட்டறிக்கையில் மேற்கூறிய தகவலை வெளியிட்டனர்.

உக்ரைனுக்கு அரசியல், நிதி, மனிதநேய மற்றும் ராணுவ உதவிகளை எவ்வளவு காலத்திற்கு தேவைப்படுமோ அதுவரையில் பிரான்ஸ் அரசு தொடர்ந்து வழங்கி ஆதரவளிக்கும் என பாரீஸ் நகரில் வைத்து மேக்ரான் மீண்டும் வலியுறுத்தி கூறியுள்ளார்.


Next Story