உக்ரைனுக்கு மனிதநேய உதவி; 7,725 கிலோ பொருட்களை அளித்த இந்தியா


உக்ரைனுக்கு மனிதநேய உதவி; 7,725 கிலோ பொருட்களை அளித்த இந்தியா
x

உக்ரைனுக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட 7,725 கிலோ எடையுள்ள மனிதநேய உதவி பொருட்களை இந்தியா அளித்து உள்ளது.



கீவ்,



உக்ரைன் நாட்டின் மீது ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி மாத இறுதியில், ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் தாக்குதலை தொடுத்தன. ரஷியா தொடங்கிய இந்த போரானது 6 மாதங்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், உக்ரைன் நாட்டுக்கான புதிதாக நியமிக்கப்பட்ட இந்திய தூதர் ஹர்ஷ் குமார் ஜெயின், உக்ரைன் மக்களின் தேவைக்காக அந்நாட்டு சுகாதார துறை துணை மந்திரி ஒலெக்சி யரெமென்கோவிடம் 7,725 கிலோ எடையுள்ள மனிதநேய உதவி பொருட்களை வழங்கி உள்ளார்.

அவற்றில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆகியவை அடங்கியுள்ளன. உக்ரைன் நாட்டுக்கு கடந்த மார்ச் மாதத்தில் இருந்து முதன்முறையாக மனிதநேயம் அடிப்படையிலான உதவிகளை இந்தியா அனுப்பி வருகிறது.

உக்ரைன் மீது போர் தொடங்கியது முதல், பகைமைகளை மறந்து போரை கைவிட்டு வன்முறைக்கு முடிவு ஏற்படுத்தும்படி இந்தியா தொடர்ந்து இரு தரப்பினருக்கும் அழைப்பு விடுத்து வருகிறது.

இரு நாட்டு தலைவர்களும் தூதரக மற்றும் பேச்சுவார்த்தை வழிக்கு திரும்ப வேண்டும் என இந்தியா தொடர்ந்து கூறியதுடன், போரை முடிவுக்கு கொண்டு வரும் அனைத்து தூதரக முயற்சிகளுக்கும் துணை நிற்போம் என்றும் தெரிவித்து இருந்தது.


Next Story