நிலநடுக்கம் புனரமைப்பு : நேபாள அரசு மற்றும் மக்களுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கும் - மத்திய மந்திரி ஜெய்சங்கர்


தினத்தந்தி 5 Jan 2024 9:09 PM GMT (Updated: 6 Jan 2024 12:57 AM GMT)

உள்கட்டமைப்பை புனரமைப்பதற்காக ரூ.623 கோடி நிதியுதவியை வழங்க முடிவு செய்துள்ளோம்.

காத்மாண்டு,

மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் நேபாளம் சென்றுள்ளார். நேற்று அவர் தலைநகர் காத்மாண்டுவில் 2015-ம் ஆண்டு நிலநடுக்கத்துக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு திட்டங்களை அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி என்.பி. சவுத் உடன் இணைந்து திறந்து வைத்தார். இந்த விழாவில் ஜெய்சங்கர் பேசியதாவது:-

2015-ல் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கு ஆதரவளிக்கும் இந்த புனரமைப்பு திட்டங்களை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி.

கடந்த ஆண்டு நவம்பரில் நேபாளத்தின் மேற்குப் பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பேரழிவுகளை அறிந்து இந்தியா வருத்தமடைந்தது.

இக்கட்டான சூழ்நிலையில் நேபாள அரசு மற்றும் மக்களுடன் துணை நிற்பதாக அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க உறுதியளித்துள்ளார். அதன்படி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்கட்டமைப்பை புனரமைப்பதற்காக ரூ.623 கோடி நிதியுதவியை வழங்க முடிவு செய்துள்ளோம். இதனை நேபாள பிரதமர் பிரசாந்தாவிடம் தெரிவித்தேன். நாங்கள் தொடர்ந்து நேபாள மக்களுக்கு ஆதரவாக நிற்போம் மற்றும் நேபாள அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு பங்களிப்போம்.

இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.


Next Story