'வழிபாட்டுத்தலங்கள் மீதான தாக்குதல்களை தடுக்க வேண்டும்' - கனடா அரசுக்கு இந்தியா வலியுறுத்தல்


வழிபாட்டுத்தலங்கள் மீதான தாக்குதல்களை தடுக்க வேண்டும் - கனடா அரசுக்கு இந்தியா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 14 Nov 2023 3:18 AM GMT (Updated: 14 Nov 2023 3:21 AM GMT)

பயங்கரவாதத்தை தூண்டும் இயக்கங்களின் நடவடிக்கைகளை கனடா அரசு கட்டுப்படுத்த வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஜெனீவா,

ஐ.நா. சபை மனித உரிமைகள் ஆணையத்தின் மதிப்பாய்வு கூட்டம் ஜெனீவாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தியா, வங்காளதேசம், இலங்கை உள்ளிட்ட ஐ.நா. உறுப்பு நாடுகள் கலந்து கொண்டு பல்வேறு பரிந்துரைகளை வழங்கின.

அப்போது பேசிய இந்திய தூதர் முகமது ஹுசைன், கனடாவில் ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களை தடுக்கும் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் பேச்சு சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை தூண்டும் இயக்கங்களின் நடவடிக்கைகளை கனடா அரசு கட்டுப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.

அதேபோல், சிறுபான்மையினர் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் மீதான தாக்குதல்களை தடுக்கவும், வெறுப்பு பேச்சுகள் மற்றும் குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில் கனடா அரசு அரசியலமைப்பை பலப்படுத்த வேண்டும் எனவும் முகமது ஹுசைன் வலியுறுத்தினார்.


Next Story