இலங்கையில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தல்


இலங்கையில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
x

இலங்கையில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும், தேவைப்பட்டால் இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம் என கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது.



கொழும்பு,

இலங்கையில் விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை ஆகியவற்றை தொடர்ந்து கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

நிதி நெருக்கடியால், உணவு, மருந்து மற்றும் எரிபொருள் ஆகியவற்றை இறக்குமதி செய்யவோ, விலை கொடுத்து வாங்கவோ முடியாத சூழ்நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது. சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை இல்லாத வகையிலான எரிபொருள் பற்றாக்குறையால் அந்நாடு சிக்கி தவித்து வருகிறது.

இந்த சூழலில், இலங்கைக்கு இந்தியா ஆதரவுகரம் நீட்டியுள்ளது. கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள், உரம் போன்றவற்றை தீவு நாடான இலங்கைக்கு கப்பலில் அனுப்பி வருகிறது. எனினும், இலங்கையில் நெருக்கடியான சூழல் நீடித்து வருகிறது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியான சூழலால் மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர். எனினும், போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபயா தனது குடும்பத்துடன் தப்பி விட்டார். கோத்தபயா தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு கடந்த 13ந்தேதி ராணுவ விமானத்தில் தப்பி சென்றார்.

இதன்பின், மாலத்தீவில் இருந்தபடியே சிங்கப்பூருக்கு சென்றார். இலங்கையில் பல வார போராட்டங்களுக்கு பின்னர், கடந்த வியாழ கிழமை இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே விலகினார்.

இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கடந்த வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார். ஆனால் அவரும் பதவி விலக கோரி நாடெங்கும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில் இலங்கையில் அவசரநிலையை பிறப்பிப்பதற்கான உத்தரவை இடைக்கால அதிபர் ரணில் நேற்று முன்தினம் காலை வெளியிட்டார்.

இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் ஒருபுறம் நடந்து வருகின்றன. இதனை தொடர்ந்து புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.

இந்த சூழலில், இலங்கையில் கொழும்பு நகரில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டு உள்ள செய்தியில், இலங்கையில் தற்போது ஏற்பட்டு உள்ள நெருக்கடியான சூழலில், இங்கிருக்கும் இந்தியர்கள் சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றிய விவரங்களை பற்றி தொடர்ந்து அறிந்து கொண்டு, அதன்பின்னர் தங்களது பயணம் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கேட்டு கொள்ளப்படுகின்றனர் என அறிவுறுத்தி உள்ளது.

தேவைப்பட்டால் கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்தினை இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்து உள்ளது.


Next Story