அமெரிக்காவில் கொலை வழக்கில் இந்திய வம்சாவளி போலீஸ் அதிகாரி விடுதலை


அமெரிக்காவில் கொலை வழக்கில் இந்திய வம்சாவளி போலீஸ் அதிகாரி விடுதலை
x

அமெரிக்காவில் கொலை வழக்கில் இந்திய வம்சாவளி போலீஸ் அதிகாரி விடுதலை செய்யப்பட்டார்.

ஹூஸ்டன்,

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் போர்ட் வொர்த் நகரில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரவிந்தர் சிங்.

கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் போர்ட் வொர்த் நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு வெளியே பெண் ஒருவர் மயங்கி கிடப்பதாக வந்த தகவலின் பேரில் அதுபற்றி விசாரிப்பதற்காக ரவிந்தர் சிங் அங்கு சென்றார்.

புல் தரையில் கிடந்த அந்த பெண் நலமாக இருக்கிராறா என்பதை சோதிக்க ரவிந்தர் சிங் அந்த பெண்ணின் அருகில் சென்றார். அப்போது நாய் ஒன்று ரவிந்தர் சிங்கை நோக்கி ஆவேசமாக ஓடிவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ரவிந்தர் சிங் நாயை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டார். அப்போது எதிர்பாராத விதமாக புல் தரையில் கிடந்த பெண்ணின் மார்பில் துப்பாக்கி குண்டு துளைத்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதை தொடர்ந்து, ரவிந்தர் சிங் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு மத்தியில் ரவிந்தர் சிங் தனது பணியை ராஜினாமா செய்தார். பின்னர் அவர் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு டெக்சாஸ் மாகாண கோர்ட்டில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் இறுதி விசாரணை நடந்த நிலையில் இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி ரவிந்தர் சிங் குற்றவாளி அல்ல என கூறி வழக்கில் இருந்து அவரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.


Next Story