அமெரிக்காவில் இந்திய மாணவர் மர்ம மரணம்; நடப்பு ஆண்டில் 10-வது சம்பவம்


அமெரிக்காவில் இந்திய மாணவர் மர்ம மரணம்; நடப்பு ஆண்டில் 10-வது சம்பவம்
x

அமெரிக்காவில் உயிரிழந்த இந்திய மாணவரின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர தேவையான உதவிகளை செய்து தர தயாராக இருக்கிறோம் என இந்திய தூதரகம் உறுதி அளித்துள்ளது.

நியூயார்க்,

அமெரிக்காவில் உயிரிழந்த இந்திய மாணவரின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர தேவையான உதவிகளை செய்து தர தயாராக இருக்கிறோம் என இந்திய தூதரகம் உறுதி அளித்துள்ளது.

அமெரிக்காவில் நடப்பு ஆண்டில் இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் கிளெவ்லேண்ட் நகரில் படித்து வந்த இந்திய மாணவர் உமா சத்யசாய் கத்தே. இவர் திடீரென மரணம் அடைந்து கிடந்துள்ளார்.

இதனை நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது. அவருடைய இறப்புக்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்து உள்ள தூதரகம், கத்தேவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்திருக்கிறது.

அவருடைய உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவது உள்பட சாத்தியப்பட்ட அனைத்து உதவிகளையும் செய்து தர தயாராக இருக்கிறோம் என உறுதியும் அளித்துள்ளது. இதுபற்றிய போலீசாரின் விசாரணையும் நடந்து வருகிறது.

நடப்பு ஆண்டில் இந்திய மாணவர் அல்லது இந்தியர் ஒருவர் மரணம் அடைவது இது 10-வது சம்பவம் ஆகும். இதன்படி, கடந்த மார்ச் மாதத்தின் மத்தியில் போஸ்டனில் அபிஜீத் பருசுரு என்ற இந்திய மாணவர் மரணம் அடைந்துள்ளார். இதுபற்றி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், முதல்கட்ட விசாரணையில், சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் இல்லை என தெரிவித்தது.

சமீபத்தில், இந்தியாவின் தெலுங்கானாவை சேர்ந்த வெங்கட்ரமண பித்தலா (வயது 27) என்பவர் தண்ணீர் ஸ்கூட்டர் எனப்படும் ஜெட் ஸ்கை ஒன்றை வாடகைக்கு எடுத்து கொண்டு சென்றபோது, விபத்தில் சிக்கி பலியானார்.

இந்தியாவை சேர்ந்த அமர்நாத் கோஷ் (வயது 34) என்ற பரதநாட்டிய நடன கலைஞர், செயின்ட் லூயிஸ் பகுதியில் சமீபத்தில் சுட்டு கொல்லப்பட்டார்.

அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில், வர்த்தக படிப்பு படித்து வந்த ஸ்ரேயாஸ் ரெட்டி பெனிகர் (வயது 19) என்பவர் கடந்த பிப்ரவரியில் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார். எனினும், இதில் சந்தேகப்படும்படி எதுவும் இல்லை என உள்ளூர் போலீசார் தெரிவித்தனர்.

இதேபோன்று, இண்டியானா மாகாணத்தில், பர்டியூ பல்கலைக்கழக மாணவரான நீல் ஆச்சாரியா என்ற மற்றொரு இந்திய மாணவர் கடந்த ஜனவரி 28-ந்தேதி காணாமல் போனார். அதன்பின் சில நாட்களில் அவர் மரணம் அடைந்து விட்டார் என தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன், ஜனவரி 16-ந்தேதி ஜார்ஜியா மாகாணத்தின் லித்தோனியா நகரில் எம்.பி.ஏ. படித்து வந்த மாணவர் விவேக் சைனி (வயது 25) என்பவர், போதை ஆசாமி ஒருவரால் சுத்தியலால் அடித்து கொல்லப்பட்ட கொடூரம் நடந்தது. சைனி பணிபுரிந்து வந்த கடையில், தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்த நிலையில், பதிலுக்கு அந்த நபர், 50-க்கும் மேற்பட்ட முறை சுத்தியலால் தாக்கியுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே சைனி உயிரிழந்து விட்டார்.

இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த அகுல் பி. தவான் (வயது 18) என்பவர் கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்து கிடந்துள்ளார். அவருக்கு உடல் வெப்ப இழப்பு என்ற ஹைப்போதெர்மியா பாதிப்புகளுக்கான அறிகுறிகள் இருந்துள்ளன.

சமீர் காமத் (வயது 23) என்ற இந்திய மாணவர் வாரன் கவுன்டி பகுதியில் கடந்த பிப்ரவரியின் முற்பகுதியில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதேபோன்று, இந்தியரான சையத் மஜாகீர் அலி என்ற ஐ.டி. மாணவர் ஒருவர் சிகாகோ நகரில் கடந்த பிப்ரவரி 4-ந்தேதி மர்ம நபர்களால் துரத்தி, துரத்தி தாக்கப்பட்டார்.

இண்டியானா வெஸ்லியான் பல்கலைக்கழகத்தில் ஐ.டி. பிரிவில் முதுநிலை படிப்பை படித்து வந்த அலி, அவருடைய வீடு அருகே நடந்து சென்றபோது, 3 பேர் அவரை விரட்டியுள்ளனர். இதில், மூக்கு, முகம் உள்பட பல இடங்களில் ரத்த காயங்கள் ஏற்பட்டன. இதுபற்றி வீடியோக்களும் சமூக ஊடகத்தில் வெளிவந்து அதிர்ச்சி ஏற்படுத்தின.


Next Story