ஈரானில் இருந்து அனுப்பப்பட்ட ஏவுகணைகளை பிரிட்டன் கடற்படை பறிமுதல் செய்யவில்லை - ஈரான்


ஈரானில் இருந்து அனுப்பப்பட்ட ஏவுகணைகளை பிரிட்டன் கடற்படை பறிமுதல் செய்யவில்லை - ஈரான்
x

ஏமன் கிளா்ச்சியாளா்களுக்கு ரகசியமாக ஈரான் அனுப்பிய ஏவுகணைகளை பறிமுதல் செய்துள்ளதாகவும் பிரிட்டன் தெரிவித்து உள்ளது.

டெஹ்ரான்,

ஏமன் கிளா்ச்சியாளா்களுக்கு ரகசியமாக ஏவுகணைகளை ஈரான் அனுப்பியது என்றும், ஈரானில் இருந்து படகுகளில் கடத்தப்பட்ட ஏவுகணைகளை பிரிட்டிஷ் கடற்படை வழிமறித்துப் பறிமுதல் செய்துள்ளதாகவும் பிரிட்டன் தெரிவித்து உள்ளது.

ஏமனில் சா்வதேச அங்கீகாரம் பெற்ற அரசுக்கு எதிராக ஷியா முஸ்லிம் பிரிவினரை அதிகம் கொண்ட ஹவுதி பழங்குடியின கிளா்ச்சிப்படையினா் சண்டையிட்டு, தலைநகா் சனா உள்ளிட்ட கணிசமான பகுதிகளை சென்ற 2014 ஆம் வருடம் கைப்பற்றினா்.

இதில் ஷியா பிரிவினரை பெரும்பான்மையாகக் கொண்ட ஈரான், கிளா்ச்சியாளா்களுக்கு ஆதரவு வழங்குவதாக பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டினாலும், அதை ஈரான் மறுத்து வருகிறது.

இந்த நிலையில் சன்னி பிரிவைச் சோ்ந்த அப்போதைய அதிபா் மன்சூா்ஹாதிக்கு ஆதரவாக அப்பிரிவினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட சவூதி அரேபியா, ஹவுதி கிளா்ச்சியாளா்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.

இப்போது இருதரப்பினருக்கும் இடையில் போா் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டாலும், சவூதிஅரேபியா மீது ஹவுதி கிளா்ச்சியாளா்கள் அவ்வப்போது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகின்றனா். அந்த ஏவுகணைகளை ஈரான் தான் அவா்களுக்கு வழங்குவதாக பிரிட்டன் குற்றம்சாட்டி வருகிறது.

இந்த நிலையில், ஹவுதி கிளா்ச்சியாளா்களுக்கு ஈரான் ஆயுத உதவி அளிப்பதற்கான வலுவான ஆதாரம் தங்களுக்குக் கிடைத்து உள்ளதாக அந்நாடு தெரிவித்து இருக்கிறது.

இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பிரிட்டன் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானில் இருந்து அனுப்பட்ட தரையிலிருந்து வான் இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகள் மற்றும் என்ஜின்கள், தரை இலக்குகளைத் தாக்கும் குரூஸ் வகையான ஏவுகணைகள் போன்றவற்றை பிரிட்டன் கடற்படை பறிமுதல் செய்து உள்ளது.

கிளா்ச்சியாளா்களுக்கு ஈரான் அதி நவீனமான ஆயுதங்கள் அனுப்பி, அவை பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது இதுவே முதன் முறையாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரானின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கூற்றை நிராகரித்தார்.

"ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆயுத ஏற்றுமதியைத் தக்கவைத்துக்கொள்வதில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அணுகுமுறை தான், ஏமன் போர் நீடிப்பதற்கான காரணங்களில் ஒன்றாகும்.இதில் எந்த சந்தேகமும் இல்லை" என்று குற்றம்சாட்டினார்.

மேலும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து மண் மாதிரிகளை எடுத்ததாக பிரிட்டன் தூதரக அதிகாரி உள்பட பலரை ஈரான் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story