போர் நிறுத்தம் : ஹமாஸ் அமைப்பின் கோரிக்கையை நிராகரித்த இஸ்ரேல்


போர் நிறுத்தம் : ஹமாஸ் அமைப்பின் கோரிக்கையை நிராகரித்த இஸ்ரேல்
x

Photo Credit: AFP

தினத்தந்தி 8 Feb 2024 8:18 AM GMT (Updated: 8 Feb 2024 11:33 AM GMT)

காசாவின் எந்தப் பகுதியையும், ஹமாஸ் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விடமாட்டோம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஜெருசலேம்,

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்குள் திடீரென ஊடுருவிய ஹமாஸ் அமைப்பினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதனால், வெகுண்டெழுந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை ஒழித்து கட்டாமல் ஓய மாட்டோம் எனக் கூறி காசா மீது அதிரடி தாக்குதலை தொடங்கியது. நான்கு மாதங்களாக இந்த போர் நீடித்து வருகிறது. இந்த போரால் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். இதனால் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகளும் மத்தியஸ்தம் செய்ய முயன்று வருகின்றன.

குறிப்பாக போர் நிறுத்தம் கொண்டு வர கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன. இதில் ஹமாஸ் அமைப்பினர் மூன்று கட்ட போர் நிறுத்த உடன்படிக்கையை அண்மையில் முன்வைத்தனர். இதன்படி, முதல் கட்டத்தில் 19 வயதுக்குப்பட்ட இஸ்ரேல் பிணைக்கைதிகள், முதியவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும், அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் 1,500 பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.

2-வது கட்டத்தில் ஆண் பிணைக்கைதிள் விடுவிக்கப்படுவார்கள். 3-ம் கட்டத்தில் உயிரிழந்த பிணைக் கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்படும். அதன் பிறகு நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும் என்று ஹமாஸ் கூறியது. ஆனால் ஹமாஸ் அமைப்பினர் கோரிக்கையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நிராகரித்துள்ளார். ஹமாஸ் அமைப்பு விடுத்துள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் ஒரு மாயை எனவும் அந்த அமைப்புக்கு எதிராக முழுமையான வெற்றியை அடையும் வரை போர் தொடரும் என்றும் நேதன்யாகு கூறியுள்ளார்.


Next Story