அமெரிக்காவில் இந்திய தூதரகம் முன் காலிஸ்தானியர்கள் போராட்டம்: தூதருக்கு மிரட்டல்


அமெரிக்காவில் இந்திய தூதரகம் முன் காலிஸ்தானியர்கள் போராட்டம்: தூதருக்கு மிரட்டல்
x

அமெரிக்காவில் இந்திய தூதரகம் முன் போராட்டம் நடத்திய காலிஸ்தானியர்கள் தூதர், தூதரக பணியாளருக்கு மிரட்டல் விடுத்ததுடன், இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதலும் நடத்தப்பட்டு உள்ளது.



வாஷிங்டன்,


ஆஸ்திரேலியா மற்றும் கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் சமீப காலங்களாக இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. இவற்றில், ஆஸ்திரேலியாவில் கடந்த ஜனவரியில் அடுத்தடுத்து 3 கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், இந்தியாவுக்கு எதிரான வாசகங்களும் கோவில் சுவர்களில் எழுதப்பட்டன.

இந்து கோவில்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தி, இந்தியாவுக்கு எதிரான வாசகங்களையும் அதில் எழுதி இருந்தது பரபரப்பு ஏற்படுத்தியது. இந்துக்கள் மீது வெறுப்பை உமிழும் இந்த செயல்களால், பல்வேறு இந்தியர்கள் மற்றும் சீக்கிய தலைவர்களும் வருத்தம் அடைந்தனர். சம்பவத்திற்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் கடந்த 22-ந்தேதி உள்ள இந்திய தூதரகம் முன் காலிஸ்தானியர்கள் ஒன்று திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.

தொடர்ந்து அவர்கள், இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர். இதனால், போலீசார் அவர்களை கட்டுப்படுத்தும் வகையில், தடுப்பான்களை அமைத்தனர். ஆனால், அவற்றை நீக்கி விட்டு, தொடர்ந்து கோஷம் எழுப்பினர்.

இதனால், அந்த பகுதியில், பாதுகாப்புக்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து, லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே லண்டன் பெருநகர போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு பாதுகாப்பை பலப்படுத்தினர்.

இந்நிலையில், அமெரிக்காவில் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள இந்திய தூதரகத்திற்கு முன்னால், காலிஸ்தானியர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் நேற்று ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அவர்கள் கோஷங்களை எழுப்பியபடியும், இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய துணிகளை ஏந்தியபடியும் காணப்பட்டனர்.

அவர்கள் தூதர் மற்றும் தூதரக பணியாளருக்கு மிரட்டல் விடுத்தும் உள்ளனர். அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண்ஜீத் சிங் சந்துவை அவர்கள் மிரட்டி உள்ளனர். தூதரகத்தில் பணியில் இருந்த ஊழியரையும் மிரட்டி உள்ளனர்.

அவர்கள் போராட்டத்தின்போது, இந்த போலி நாடகம் ஒரு முடிவுக்கு வரும் என அறிவித்ததுடன், உங்களது கார் கண்ணாடிகள் நொறுங்கும் நாள் வரும். தூதரகத்தில் உள்ளவர்கள் எங்கும் தப்பி செல்ல முடியாது என அச்சுறுத்தலும் விடுத்து உள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நாடு முழுவதும் அனைத்து சமூகத்தினரையும் இந்திய அரசாங்கம் கொன்று வருகிறது என வெற்று முழக்கங்களையும் எழுப்பினர். சிறுவர், முதியவர் என வயது வித்தியாசமின்றி, பெண்கள் உள்பட அனைத்து தரப்பு காலிஸ்தானியர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

அவர்கள் வாஷிங்டன், மேரிலேண்ட், விர்ஜீனியா உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வந்து உள்ளனர். தூதரகத்திற்கு வெளியே இந்திய பத்திரிகையாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் கூறப்படுகிறது.


Next Story