பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல்: இம்ரான்கானின் 2 வேட்புமனுக்களும் ரத்து


பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல்: இம்ரான்கானின் 2 வேட்புமனுக்களும் ரத்து
x

கோப்புப்படம் 

இம்ரான்கான் 2 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தநிலையில், அந்த 2 வேட்புமனுக்களையும் அந்நாட்டு தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

லாகூர்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சித் தலைவராக உள்ளார். 71 வயதான இம்ரான் கான், 2018 முதல் ஏப்ரல் 2022, வரையிலான காலகட்டத்தில் பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தார். இம்ரான்கான் தன்னுடைய பதவி காலத்தில் வெளிநாட்டு தலைவர்களிடம் இருந்து பெற்ற பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் முறைகேடாக விற்று சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் கோர்ட்டு கடந்த ஆகஸ்டு மாதம் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு இம்ரான்கானுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடைவிதித்து, அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது. ஆனால் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கைது செய்யப்பட்டார். இதனால் அவர் தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார்.

இந்த சூழலில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ந்தேதி நடைபெறும் பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான்கான் சிறையில் இருந்தபடியே போட்டியிடுவார் என அவரது பாகிஸ்தான்-தெஹ்ரீப்-இ-இன்சாப் கட்சி அறிவித்தது. அதன்படி பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளான லாகூர் மற்றும் மியான்வாலி ஆகிய 2 தொகுதிகளில் இம்ரான்கான் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில் இம்ரான்கானின் 2 வேட்புமனுக்களையும் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் ரத்து செய்துவிட்டது. தோஷ்கானா வழக்கில் தண்டிக்கப்பட்டவர் என்பதால் இம்ரான்கானின் வேட்மனுக்களை ரத்து செய்ததாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story