"இலங்கைக்கு புதிய நிதியுதவி வழங்கும் திட்டமில்லை" - உலக வங்கி திட்டவட்டம்


இலங்கைக்கு புதிய நிதியுதவி வழங்கும் திட்டமில்லை - உலக வங்கி திட்டவட்டம்
x
தினத்தந்தி 26 May 2022 9:48 PM GMT (Updated: 26 May 2022 10:21 PM GMT)

இலங்கைக்கு புதிய நிதி உதவி வழங்க திட்டமிடவில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது.

கொழும்பு,

அண்டை நாடான இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் தவித்துக்கொண்டிருக்கிறது. அன்னியச்செலாவணி கரைந்து, இறக்குமதி பாதித்து, அத்தியாவசிய பொருட்கள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் கொதித்தெழுந்த மக்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலகக்கோரி தொடர் போராட்டத்தில் குதித்தனர். இதில் வன்முறை தாண்டவமாடியது.

அதைத் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரம சிங்கே (வயது 73) கடந்த 12-ந் தேதி நியமிக்கப்பட்டு பதவி ஏற்றார். புதிய மந்திரிகள் நியமிக்கப்பட்டு பதவி ஏற்றாலும், நிதி மந்திரி நியமிக்கப்படா நிலை நீடித்தது. இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்ரம சிங்கேயை நாட்டின் நிதி மந்திரியாக அதிபர் கோத்தபய ராஜபக்சே நியமித்தார்.

கிட்டத்தட்ட திவாலான நிலையில் உள்ள இலங்கையின் பொருளாதாரத்தை ரணில் விக்ரம சிங்கே எப்படி தூக்கி நிறுத்தப்போகிறார் என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது. ஏறத்தாழ 7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.52,500 கோடி) கடன் தவணையை திருப்பி செலுத்த வேண்டியதை இலங்கை நிறுத்தி வைத்துள்ளது. நாட்டின் மொத்த கடன் 51 பில்லியன் டாலராக (சுமார் ரூ.3 லட்சத்து 82 ஆயிரத்து 500 கோடி) உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாட்டை முடிவுக்கு கொண்டு வர 5 பில்லியன் டாலர் (ரூ.37,500 கோடி) நிதி தேவைப்படுகிறது.

இந்த நிலையில், போதுமான பொருளாதார கட்டமைப்பை உருவாக்கும் வரை இலங்கைக்கு புதிதாக நிதியுதவி வழங்கும் திட்டம் இல்லை என உலக வங்கி அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விளக்கமளித்துள்ள உலக வங்கி, இலங்கையில் பொருளாதார நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சியை மீட்டெடுப்பதற்கான பொருத்தமான கொள்கைகளை வகுக்க ஆலோசனை வழங்கப்படும் எனவும், ஆனால் இலங்கைக்கு புதிய நிதி உதவி வழங்க உலக வங்கி திட்டமிடவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய மருந்துகள், உணவு, கல்வி மற்றும் விவசாயம் உள்ளிட்டவைக்கு மட்டும் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட நிதி திட்டங்களின் மூலம் இலங்கைக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. ஏற்கனவே வெளிநாட்டு கடன் சுமைகளை கையாள்வதில் இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், உலக வங்கியின் இந்த அறிவிப்பு, ரணில் விக்கிரம சிங்கே அரசுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.


Next Story