ஷின்ஜோ அபேவுக்கு அரசு இறுதி சடங்கு செய்ய எதிர்ப்பு: ஒருவர் தீக்குளிப்பு


ஷின்ஜோ அபேவுக்கு அரசு இறுதி சடங்கு செய்ய எதிர்ப்பு:  ஒருவர் தீக்குளிப்பு
x

ஜப்பானில் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபேவுக்கு அரசு இறுதி சடங்கு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் அலுவலகம் அருகே ஒருவர் தீக்குளித்து உள்ளார்.


டோக்கியோ,


ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்தவர் ஷின்ஜோ அபே (வயது 67). 2006-07, 2012-20 கால கட்டத்தில் அங்கு பிரதமர் பதவி வகித்தவர் மற்றும் லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவராகவும் இருந்தவர் அவர். கடந்த 2020-ம் ஆண்டு, அவர் உடல்நல பிரச்சினையை காரணம் காட்டி பதவி விலகினார். ஆனாலும் கட்சி செயல்பாடுகளில் கலந்து கொண்டு வந்தார்.

இந்த நிலையில், ஜப்பான் நாடாளுமன்ற மேல்சபைக்கான தேர்தல் பிரசார கூட்டத்தில் கடந்த ஜூலை மாதத்தில் அவர் பங்கேற்றார். இதற்காக, நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாரா நகர ரெயில் நிலையம் முன்பு கடந்த ஜூலை 8-ந்தேதி காலை 11.30 மணிக்கு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ஷின்ஜோ அபே கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசத்தொடங்கிய சில நிமிடங்களில், அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த நபர் அவரை துப்பாக்கியால் 2 முறை சுட, அவர் கழுத்தில் குண்டுபாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அவர் உடனடியாக அவசர சிகிச்சைக்காக நாரா மருத்துவ பல்கலைக்கழக ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரில் எடுத்து செல்லப்பட்டார்.

இருப்பினும் அவரை காப்பாற்ற 20 பேரை கொண்ட டாக்டர்கள் குழு பல மணி நேரம் போராடியும், ஷின்ஜோ அபேயை காப்பாற்ற முடியவில்லை. உள்ளூர் நேரப்படி மாலை 5.03 மணிக்கு அவர் உயிரிழந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர்.

ஷின்ஜோ அபேயை சுட்ட நபர், டெட்சுயா யமகாமி (வயது 41), கடற்படை வீரர் என தெரிய வந்துள்ளது. அவர் உடனே சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டார்.

அவரது இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் தலைநகர் டோக்கியோவில் உள்ள கித்தனோமரு நேசனல் கார்டனில் நிப்பான் புத்தோகன் பகுதியில் வருகிற செப்டம்பர் 27-ந்தேதி அரசு மரியாதையுடன் நடத்த ஜப்பானிய அரசாங்கம் திட்டமிட்டு உள்ளது.

இந்த நிலையில், ஜப்பானில் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபேவுக்கு அரசு சார்பில் இறுதி சடங்குகள் செய்ய முடிவானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டோக்கியோ நகரில் சியோடா வார்டு பகுதியில் உள்ள பிரதமர் அலுவலகம் அருகே நபர் ஒருவர் தன் மீது தீ வைத்து கொண்டார்.

அதற்கு முன்பு, அரசு முடிவுக்கு தனது எதிர்ப்பை தெரிவிக்கிறேன் என அந்த நபர் போலீசாரிடம் கூறியுள்ளார். இந்நிலையில், தீ பற்றி எரிந்ததும், போலீசாருக்கு தகவல் சென்றுள்ளது. இதனை தொடர்ந்து சம்பவ பகுதிக்கு சென்ற போலீசார் தீயை அணைத்து அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். இதில், காவல் அதிகாரி ஒருவருக்கும் காயம் ஏற்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து, 2 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இதுபற்றி சுற்றியுள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமிராக்களில் இருந்து தகவல்களை பெறும் பணியில் பெருநகர போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

ஜப்பானில் சுட்டுக்கொல்லப்பட்ட 6-வது முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. அவரை கொல்வதற்கு ஓராண்டு காலம் வரை டெட்சுயா யமகாமி திட்டமிட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Next Story