பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது - இணைய சேவை முடக்கம்


பாகிஸ்தானில் நாடாளுமன்ற  தேர்தல்:  வாக்குப்பதிவு தொடங்கியது - இணைய சேவை முடக்கம்
x
தினத்தந்தி 8 Feb 2024 4:55 AM GMT (Updated: 8 Feb 2024 6:58 AM GMT)

பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் விறு விறுப்புடன் நடைபெற்று வருகின்றது.

இஸ்லாமாபாத்,

வன்முறை, அரசியல் நிச்சயமற்ற தன்மை, பொருளாதார நெருக்கடி போன்ற சவால்களுக்கு மத்தியில் பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது.வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. வாக்குச் சாவடிக்கு வாக்காளர்கள் வந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி மொத்தம் 12 கோடியே 85 லட்சத்து 85 ஆயிரத்து 760 பேர் வாக்களிக்க தகுதியுடைவர்கள் என தெரிகிறது.

இவர்கள் வாக்களிப்பதற்காக நாடு முழுவதும் 9 லட்சத்து 7 ஆயிரத்து 675 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் எந்தவித இடையூறும் இன்றி வாக்களிக்க ஏதுவாக பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலையொட்டி போலீசார், சிறப்பு ஆயுதப்படை வீரர்கள், ராணுவ வீரர்கள் என சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்குப்பதிவு முடிந்ததும் விரைவில் எண்ணும் பணி தொடங்கும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் உள்ள நிலையில், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (பிஎம்எல்-என்) கட்சி தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் - இ- இன்சாப் (பிடிஐ) கட்சியின் சின்னமான கிரிக்கெட் பேட்டிற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதனால் அக்கட்சி வேட்பாளர்கள் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர்.

பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதால் நாடு முழுவதும் மொபைல் சேவைகளை தற்காலிகமாக நிறுத்த அந்நாட்டு உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மைக்காலமாக அதிகரித்து வரும் தீவிரவாதச் செயல்களால் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோயுள்ளன. நாட்டில் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது.

எனவே, பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிராக பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது,


Next Story