கிரீஸ் காட்டுத்தீயை அணைத்தபோது விபத்தில் சிக்கிய விமானம்; 2 விமானிகள் உயிரிழப்பு


கிரீஸ் காட்டுத்தீயை அணைத்தபோது விபத்தில் சிக்கிய விமானம்; 2 விமானிகள் உயிரிழப்பு
x

கிரீஸ் நாட்டில் காட்டுத்தீயை அணைப்பதற்காக சென்ற விமானம் விபத்தில் சிக்கியதில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.

ஏதென்ஸ்,

கிரீஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் பருவநிலை மாற்றம் எதிரொலியாக வெப்ப அலை வீசி வருகிறது. இதனால், காட்டுத்தீ பரவி வருகிறது. இதுவரை இல்லாத வகையில், நடப்பு ஆண்டில் பெரிய அளவில் காட்டுத்தீ பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

சுற்றுலாவாசிகள் அதிகம் விரும்ப கூடிய ரோட்ஸ் தீவின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் கடந்த வாரம் செவ்வாய் கிழமை பெரிய அளவில் காட்டுத்தீ பரவியது. இதனை தொடர்ந்து, லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்புக்காக முன்பே தப்பி வெளியேறினர்.

இந்நிலையில், அந்நாட்டிற்கு உட்பட்ட கோர்பு தீவில் திடீரென பல இடங்களில் காட்டுத்தீ பரவியது. இதனால், தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் போராடி வருகின்றனர். இதில் 2,500 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதனை தொடர்ந்து, எவியா தீவிலும் காட்டுத்தீ மளமளவென பரவியது.

இந்த நிலையில், எவியா தீவில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைப்பதற்காக அந்நாட்டு விமான படையை சேர்ந்த நீர் தெளிக்கும் விமானம் ஒன்று சென்றது. கனடைர் சி.எல்.-215 என்ற எண் கொண்ட அந்த விமானம் பிளாடனிஸ்டோஸ் என்ற பகுதியில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தது.

அப்போது, அது திடீரென விபத்தில் சிக்கியது. இதில் விமானத்தின் கேப்டன் (வயது 34), துணை விமானி (வயது 27) ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

ஆயுத படையை சேர்ந்தவர்கள் பணியின்போது உயிரிழந்த நிலையில், 3 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்து உள்ளது. காட்டுத்தீயை முன்னிட்டு 20 ஆயிரம் பேர் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றப்பட்டனர். கிரீசின் அண்டை நாடான அல்ஜீரியாவில் காட்டுத்தீயால் 10 ராணுவ வீரர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.


Next Story