முதல் முறையாக உலக ஆயர்கள் மாமன்றத்தில் பெண்களும் வாக்களிக்க அனுமதி - போப் பிரான்சிஸ் நடவடிக்கை


முதல் முறையாக உலக ஆயர்கள் மாமன்றத்தில் பெண்களும் வாக்களிக்க அனுமதி - போப் பிரான்சிஸ் நடவடிக்கை
x

கோப்புப்படம்

முதல் முறையாக உலக ஆயர்கள் மாமன்றத்தில் பெண்களும் வாக்களிக்க அனுமதி வழங்கி போப் பிரான்சிஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

வாடிகன் சிட்டி,

கத்தோலிக்க திருச்சபை சீர்திருத்தம் தொடர்பாக உலக ஆயர்கள் மாமன்றம் அவ்வப்போது கூடி விவாதிக்கிறது. அதன்படி வருகிற அக்டோபர் மாதம் ஆயர்கள் மாமன்ற கூட்டம் வாடிகனில் நடக்கிறது.

இதில் பல்வேறு கருத்துகள் தொடர்பாக விவாதிக்கப்படுகிறது. இதன் இறுதியில் குறிப்பிட்ட பரிந்துரைகள் மீது வாக்கெடுப்பு நடத்தி, அது போப் ஆண்டவரிடம் ஒப்படைக்கப்படும். அதன்படி அறிக்கையை அவர் வெளியிடுவார்.

இந்த ஆயர்கள் மாமன்றத்தில் ஆயர் அல்லாத 70 உறுப்பினர்களை நியமிக்க போப் பிரான்சிஸ் முடிவு செய்துள்ளார். இதில் சரிபாதி பேர் பெண்களாகவும் இருப்பார்கள்.

இந்த மாமன்றத்தில் இதுவரை ஆண்கள் மட்டுமே வாக்களிக்கும் உரிமை பெற்றிருந்த நிலையில், முதல் முறையாக இந்த மாமன்றத்தில் பெண்களுக்கு வாக்களிக்க போப் பிரான்சிஸ் அனுமதி வழங்கி உள்ளார்.

அதன்படி இந்த மாமன்றத்தில் ஆயர் அல்லாத பெண் உறுப்பினர்கள் வாக்களிக்கிறார்கள். அத்துடன் 5 கன்னியாஸ்திரிகள் தேர்தல் பிரதிநிதிகளாகவும் நியமிக்கப்படுவார்கள்.

போப் பிரான்சிஸ் அங்கீகரித்துள்ள இந்த திருத்தத்தை வாடிகன் நேற்று வெளியிட்டது. கத்தோலிக்க திருச்சபை நடவடிக்கைகளில் பொதுநிலையினருக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாக அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story