இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் உடலுக்கு இந்திய ஜனாதிபதி முர்மு நேரில் அஞ்சலி


இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் உடலுக்கு இந்திய ஜனாதிபதி முர்மு நேரில் அஞ்சலி
x
தினத்தந்தி 18 Sep 2022 1:32 PM GMT (Updated: 18 Sep 2022 1:37 PM GMT)

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் உடலுக்கு இந்தியா சார்பில் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு அஞ்சலி செலுத்தினார்.

லண்டன்,

இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவர் தனது 96-வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் 2-ம் எலிசபெத்தின் உடல் கடந்த 13-ந்தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் ராணி எலிசபெத்தின் உடலை இங்கிலாந்து மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் 2-ம் எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நாளை காலை 6.30 மணியளவில் நடைபெற உள்ளது.

இதனிடையே, ராணி 2-ம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் இங்கிலாந்து விரைந்த வண்ணம் உள்ளனர்.

2-ம் எலிசபெத்தின் உடல் லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு தொடர்ந்து 24 மணி நேரமும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் உடலுக்கு இந்தியா சார்பில் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று அஞ்சலி செலுத்தினார். 2-ம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக அரசு முறை பயணமாக இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று இங்கிலாந்து சென்றடைந்தார்.

அவர் இன்று வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள 2-ம் எலிசபெத்தின் உடலுக்கு இந்தியா சார்பில் அஞ்சலி செலுத்தினார். நாளை நடைபெற உள்ள 2-ம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியிலும் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




Next Story