'ஜி-7' உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி வழங்கிய நினைவுப்பரிசு


ஜி-7 உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி வழங்கிய நினைவுப்பரிசு
x

Image Courtesy : PTI

ஜி-7 உச்சிமாநாட்டின்போது பிரதமர் மோடி தான் சந்தித்த தலைவர்களுக்கு பல்வேறு நினைவுப்பரிசுகளை வழங்கினார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி கடந்த 26, 27-ந் தேதிகளில் ஜெர்மனி நாட்டின் எல்மாவ் நகரில் நடந்த 'ஜி-7' உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். வெளிநாடுகளில் நடக்கிற இத்தகைய மாநாடுகளில் அவர் கலந்துகொள்கிறபோது, தான் சந்தித்து பேசுகிற தலைவர்களுக்கு இந்தியாவின் செழுமையான கலாசாரம், பாரம்பரியத்தை பிரதிபலிக்கிற பரிசுகளை வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் இந்த ஜி-7 உச்சிமாநாட்டின்போது பிரதமர் மோடி தான் சந்தித்த தலைவர்களுக்கு வழக்கிய நினைவுப் பரிசுகளின் தொகுப்பு பின்வருமாறு;-

* அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி தனது வாரணாசி தொகுதியில் புவிசார்குறியீடு பெற்ற குலாபி மீனகாரி கலைப்பொருள், கப்லிங் செட் (ஜோ பைடனின் முழுக்கை சட்டையில் பொருத்துவதற்கு உரியது), ப்ரூச் (ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனின் மேற்சட்டையில் பொருத்துவதற்கான அழகு பொருள்) ஆகியவற்றை பரிசாக தந்தார்.

* ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்சுக்கு மொரதாபாத்தின் தலைசிறந்த கலைப்படைப்பாக கருதப்படுகிற மட்கா கலைப்பொருளை கொடுத்தார்.

* ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவுக்கு நிஜமாபாத்தின் கருப்பு மண்பாண்ட செட்டுகளை பரிசாக தந்தார்.

* இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பிளாட்டின பூச்சு கொண்ட 'டீ செட்'டை பரிசாக கொடுத்தார் பிரதமர் மோடி.

* பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு உ.பி. தலைநகர் லக்னோவில் தயாரிக்கப்பட்ட பெட்டியில் இயற்கை மூலங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட வாசனைத் திரவிய பாட்டில்களை வைத்து பரிசாக கொடுத்தார்.

* இத்தாலி பிரதமர் மரியோ டிராகிக்கு சலவைக்கல்லில் தயாரிக்கப்பட்ட கலைப்பொருட்கள் தரப்பட்டது.

* செனகல் அதிபர் மேக்கி சாலுக்கு கைவினைப் பொருளான 'மூன்ச்' கூடைகளும், பருத்தி தரை விரிப்புகளும் பரிசாக கொடுக்கப்பட்டன.

* இந்தோனேசியாவின் அதிபர் ஜோகோ விடோடோவுக்கு 'ராம்தர்பார்' பரிசாக வழங்கப்பட்டது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு டோக்ரா கலைப்பொருட்கள் வழங்கப்பட்டன.

* தென் ஆப்பிரிக்காவின் அதிபர் சிரில் ராமபோசாவுக்கும், அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டசுக்கும் டோக்ரா கலைப்பொருட்களை பிரதமர் மோடி பரிசாக கொடுத்தார். இந்த டோக்ரா கலைப்பொருட்கள் 4 ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் மிக்கது.


Next Story