ரஷியாவில் இருந்து வெளியேறியதற்கு வெளிநாட்டு நிறுவனங்கள் வருத்தப்படும் - அதிபர் புதின்


ரஷியாவில் இருந்து வெளியேறியதற்கு வெளிநாட்டு நிறுவனங்கள் வருத்தப்படும் - அதிபர் புதின்
x

ரஷியாவில் இருந்து வெளியேறியதற்காக வெளிநாட்டு நிறுவனங்கள் வருத்தப்படும் என்று அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

மாஸ்கோ,

உக்ரைன் மீது ரஷியா 106-வது நாளாக போர் நடத்தி வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரை முடிவுக்கு கொண்டுவர பல நாடுகள் முயற்சித்த போதும் அவை தோல்வியில் முடிந்தன. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் ஆயுத உதவிகள் வழங்கி வருகின்றன. இதன் காரணமாக உக்ரைன் - ரஷியா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

அதேவேளை, போர் தொடங்கியது முதல் பல்வேறு மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. மேலும், பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் ரஷியாவில் செயல்பட்டு வரும் தங்கள் கிளைகளை மூடியுள்ளன. கார் உற்பத்தியில் இருந்து, உணவகம் வரை பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் ரஷியாவை விட்டு வெளியேறியுள்ளன.

இந்நிலையில், ரஷியாவின் இளம் தொழிலதிபர்களுடன் மாஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில் அதிபர் விளாடிமிர் புதின் இன்று பேசினார். நிகச்சியில் பேசிய புதின், இன்றைய சூழ்நிலையில் யாரேனும் எங்கிருந்தாவது வெளியேறினால், நடவடிக்கைகளை நிறுத்தினால் அவர்கள் தான் அதற்கு மிகவும் வருத்தப்படுவார்கள்.

ரஷியாவில் இருந்து வெளியேறிய வெளிநாட்டு நிறுவனங்கள் மிகவும் வருத்தப்படுவார்கள். ஏனென்றால் ரஷியா மிகுந்த சந்தை மதிப்பு கொண்ட நாடு. ரஷியாவில் இருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறியது மேற்கத்திய நாடுகள் மற்றும் பொருளாதாரத்தில் அமெரிக்கா எவ்வளவு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதற்கு ஆதாரமாகும். ரஷியாவை விட்டு வெளியேற வேண்டும் என கட்டாயத்தால் பல நிறுவனங்கள் வருத்தப்படுகின்றன. சுயமாக முடிவெடுக்க முடியாத நாடுகளின் வெளிப்பாடே இது' என்றார்.


Next Story