ரஷியா; அலெக்சி நவால்னிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கைது


ரஷியா; அலெக்சி நவால்னிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கைது
x

Image Courtesy : AFP

தினத்தந்தி 17 Feb 2024 3:27 PM GMT (Updated: 18 Feb 2024 12:23 PM GMT)

ரஷிய எதிர்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி நேற்றைய தினம் சிறையிலேயே உயிரிழந்தார்.

மாஸ்கோ,

ரஷிய அதிபர் புதினையும், அவரது கொள்கைகளையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி (வயது 47). இதனால் அங்குள்ள இளைஞர்கள் மத்தியில் இவருக்கான ஆதரவு பெருகுகிறது. இதனிடையே கடந்த 2013-ல் அலெக்சி நவால்னி மீது பணமோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பயங்கரவாதத்தை ஊக்குவித்தல், கோர்ட்டு அவமதிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அவருக்கு மொத்தம் 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த 2021-ம் ஆண்டு முதல் சிறை தண்டனை அனுபவித்து வந்த அலெக்சி நவால்னி, நேற்று திடீரென சிறையிலேயே உயிரிழந்தார்.

ஏற்கனவே உக்ரைனுடனான போர் உள்ளிட்ட பிரச்சினைகளால் நாட்டு மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்து உள்ள ரஷிய அதிபர் புதினுக்கு, எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியின் மரணம் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் ரஷியாவில் அதிபர் புதினுக்கு எதிராக பெரும் போராட்டங்கள் வெடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் ரஷியாவில் அலெக்சி நவால்னியின் ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்கள் மீது ரஷிய காவல்துறை கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதன்படி இதுவரை 32 நகரகளில் சுமார் 273 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story