அமெரிக்காவில் அதிர்ச்சி: மருந்துக்கு பதிலாக குழாய் நீரை செலுத்திய நர்ஸ்; 10 பேர் பலி


அமெரிக்காவில் அதிர்ச்சி:  மருந்துக்கு பதிலாக குழாய் நீரை செலுத்திய நர்ஸ்; 10 பேர் பலி
x

நோயாளிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பின் நீட்சியை பற்றி இன்னும் ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டியுள்ளது என காவல் அதிகாரி ஜெப் கூறியுள்ளார்.

ஓரிகான்,

அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் மெட்போர்டு நகரில் அசாந்தே ரோக் மண்டல மருத்துவ மையம் அமைந்துள்ளது. இதில், கடந்த 2022-ம் ஆண்டு இறுதியில் இருந்து 10 பேர் அடுத்தடுத்து திடீரென மரணம் அடைந்தனர்.

இதில் அந்த மருத்துவமனையின் முன்னாள் ஊழியர் ஒருவர் மருந்துகளை திருடியிருக்க கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் மருத்துவமனை அதிகாரிகள் கடந்த மாதம் போலீசில் புகார் அளித்தனர்.

இதுபற்றி நடந்த விசாரணையில், சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு கிருமி நீக்கம் செய்யப்படாத குழாய் நீரை அந்த நர்ஸ் கொடுத்த திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது. இதனை அவரே ஒப்பு கொண்டிருக்கிறார். அதிலும், வலி நிவாரணியாக உள்ள பென்டனைல் மருந்துக்கு பதிலாக குழாய் நீர் கொடுக்கப்பட்டு உள்ளது.

இதில், உயிரிழந்த 10 பேரில் ஆலிசன் (வயது 36), சாம்ஸ்டன் (வயது 74) ஆகியோரின் குடும்பத்தினர் மருத்துவ அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளனர். அவர்கள், வலி நிவாரண மருந்துக்கு பதிலாக, குழாய் நீரை பயன்படுத்தியதன் விளைவாக தொற்று பாதித்து, உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன என தெரிவித்திருக்கின்றனர்.

இதுபற்றி மெட்போர்டு காவல் துறையின் அதிகாரி ஜெப் கிர்க்பேட்ரிக் கூறும்போது, நோயாளிகள் நலனுக்கு எதிராக செயல்பட்ட அணுகுமுறை கவனத்தில் கொள்ள கூடியது. எனினும், நோயாளிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பின் நீட்சியை பற்றி இன்னும் ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டியுள்ளது என கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் எடுக்கப்பட்ட கைது நடவடிக்கை பற்றிய விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.


Next Story