இங்கிலாந்தில் கொத்தடிமைத்தனம்... 50 மாணவர்களை கொடுமை செய்த இந்தியர்கள்


இங்கிலாந்தில் கொத்தடிமைத்தனம்... 50 மாணவர்களை கொடுமை செய்த இந்தியர்கள்
x

இங்கிலாந்து நாட்டில் சொந்த நாட்டு மாணவர்கள் 50 பேரை 14 மாதங்களாக, இந்தியர்கள் கொத்தடிமைகளாக வேலை வாங்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.



லண்டன்,


ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சியில் இருந்து இந்தியா விடுதலை பெற்று அதன் 75-வது ஆண்டு பேரமுத கால கொண்டாட்டம் நடைபெற்று வரும் சூழலில், இந்திய மாணவர்கள் 50 பேர் நவீன கொத்தடிமைத்தனத்தில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்து உள்ளது.

இதுபற்றி இந்திய தூதுரகம் வெளியிட்ட செய்தியில், இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் அச்சம் ஏற்பட கூடிய சூழலில் உதவி, ஆலோசனை வேண்டுமென்றால் உடனடியாக தங்களை தொடர்பு கொள்ளும்படி கேட்டு கொண்டு உள்ளது.

இதுபற்றி வெளியான தகவலில், அந்நாட்டின் வடக்கு வேல்ஸ் நகரில் இந்தியாவை சேர்ந்த 5 பேர் காப்பகங்களை நடத்தி வந்து உள்ளனர். இதில், கடந்த 14 மாதங்களாக 50 இந்திய மாணவர்களை நவீன கொத்தடிமைத்தனத்திற்கு ஆளாக்கியும், தொழிலாளர்கள் என்ற பெயரில் அவர்களிடம் சுரண்டலில் ஈடுபட்டதும் தெரிய வந்து உள்ளது.

இதுபற்றி இங்கிலாந்து நாட்டில் தொழிலாளர் நலன்களுக்காக செயல்பட்டு வரும் ஜி.எல்.ஏ.ஏ. என்ற தொழிலாளர் சுரண்டலுக்கு எதிரான அரசு புலனாய்வு மற்றும் விசாரணை அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட செய்தியில், தொழிலாளர் சுரண்டலில் ஈடுபட்ட அந்த 5 பேருக்கு எதிராக கோர்ட்டு உத்தரவு பெறப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.

கேரளாவை சேர்ந்த மாத்யூ ஈசாக் (வயது 32), ஜீனு செரியன் (வயது 30), எல்தவுஸ் செரியன் (வயது 25), எல்தவுஸ் குரியச்சன் (வயது 25) மற்றும் ஜேக்கப் லிஜூ (வயது 47) ஆகிய 5 பேருக்கு அடிமைத்தனம் மற்றும் கடத்தல் தொழிலுக்கு எதிரான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இவர்கள் வடக்கு வேல்சில் நடத்தி வரும் காப்பகங்களில் இந்தியாவை சேர்ந்த மாணவர்களை வேலைக்கு சேர்த்து கொடுமைப்படுத்தி உள்ளனர். அபெர்கெலே, பவல்ஹெலி, லாண்டுட்னோ மற்றும் கால்வின் பே ஆகிய பகுதிகளில் அமைந்த காப்பகங்களுடன் தொடர்பிலோ, அதில் பணியாற்றியோ அல்லது பணியாற்றி வருபவர்களுடன் நேரடி குடும்ப தொடர்போ வைத்திருந்து வந்து உள்ளனர்.

இதற்காக ஈசாக் மற்றும் அவரது மனைவி ஜீனு செரியன், அலெக்சா கேர் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி மாணவர்களை பணிக்கு சேர்த்து விட்டு உள்ளனர்.

ஆனால் அதன்பின் வேலைக்கான ஊதியம் சரியாக தரப்படாமல் அல்லது சம்பள தொகையை பிடித்து வைத்து கொள்ளுதல் ஆகியவற்றை அவர்களுக்கு செய்து கொடுமைப்படுத்தி வந்து உள்ளனர்.

அந்த மாணவர்கள் எப்போதும் பசியாகவும், களைப்புடனேயே காணப்பட்டனர். மீதமுள்ள உணவை சாப்பிட்டு வந்து உள்ளனர். உடலில் துர்நாற்றமும் வெளிப்பட்டு உள்ளது என அதுபற்றிய அரசு விசாரணை அமைப்பு அறிக்கையில், குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது.

இதன் அடிப்படையில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் முதல் 2022-ம் ஆண்டு மே வரையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.

இங்கிலாந்து நாட்டின் சர்வதேச சட்டப்படி, மனிதர்களை நாடுகள் இடையே அல்லது நாட்டுக்கு உள்ளேயோ கடத்தி செல்வது நவீன அடிமைத்தனம் என அந்நாட்டின் போலீசார் தெரிவித்து உள்ளனர்.


Next Story