சீனாவுக்கு பறக்கப் போகும் இலங்கை குரங்குகள்... ஆராய்ச்சிக்காகவா? இறைச்சிக்காகவா? - அதிர்ச்சி தகவல்


சீனாவுக்கு பறக்கப் போகும் இலங்கை குரங்குகள்... ஆராய்ச்சிக்காகவா? இறைச்சிக்காகவா? - அதிர்ச்சி தகவல்
x

சீனாவுக்கு 1 லட்சம் குரங்குகளை ஏற்றுமதி செய்ய பரிசீலித்து வருவதாக இலங்கை வேளாண் துறை மந்திரி மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கொழும்பு,

இலங்கையில் குரங்குகள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் நிலையில், பண நெருக்கடியில் உள்ள இலங்கை, சீனாவுக்கு 1 லட்சம் குரங்குகளை ஏற்றுமதி செய்ய பரிசீலித்து வருவதாக அந்நாட்டின் வேளாண் துறை மந்திரி மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

டோக் மக்காக் என்ற குரங்கு வகை இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டது. அரிய வகையைச் சேர்ந்த டோக் மக்காக் குரங்குகளை, சீனாவின் வேண்டுகோளின் பெயரில், அந்நாட்டிலுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரியல் பூங்காக்களுக்கு அனுப்ப உள்ளதாக மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் குரங்குகள் எண்ணிக்கை 30 லட்சத்தைத் தொட்டுள்ள நிலையில், உணவு தேடி கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை அழிப்பதாலும், சில சமயங்களில் மக்களைத் தாக்குவதாலும் குரங்குகளை இலங்கைவாசிகள் தொல்லையாகத் தான் கருதுகின்றனர்.

இலங்கை இந்த ஆண்டு பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்கள் பட்டியலிலிருந்து பலவற்றை நீக்கியது. அந்நாட்டிலுள்ள 3 குரங்கினங்கள், மயில்கள் மற்றும் காட்டுப்பன்றிகள் உட்பட பலவற்றைக் கொல்ல விவசாயிகளுக்கு பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளது. இந்த சூழலில் சீனாவில் இருந்து இதுபோன்ற ஒரு கோரிக்கை வந்துள்ளதால், இலங்கையும் மனமுவந்து குரங்குகளைத் தர ஒப்புக் கொண்டுள்ளது.

சீனாவுக்கு இறைச்சிக்காக, மருத்துவ ஆராய்ச்சிக்காக அல்லது வேறு என்ன நோக்கத்திற்காக இலங்கை குரங்குகள் தேவை என கேள்வி முன்வைக்கப்பட்ட நிலையில், இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்படும் குரங்கொன்றிற்கு சீனா 50 ஆயிரம் இலங்கை ரூபாயை செலவிட உள்ள நிலையில், அவற்றை இறைச்சிக்காக பயன்படுத்த 1 லட்சம் ரூபாய் வரையில் விற்க வேண்டி இருக்கும்.

ஆனால் 1 லட்ச ரூபாய் செலவழித்து குரங்குக் கறி சாப்பிட சீனர்கள் முன்வர மாட்டார்கள் என்பதால் அவை உயிரியல் பூங்காக்களுக்குத் தான் அழைத்துச் செல்லப்பட உள்ளதாக மஹிந்த அமரவீர தெரிவித்தார்.



Next Story