நிலவில் தரையிறங்க இருந்த முதல் தனியார் விண்கலம் தொடர்பை இழந்தது - வரலாறு படைக்கும் முயற்சி தோல்வி


நிலவில் தரையிறங்க இருந்த முதல் தனியார் விண்கலம் தொடர்பை இழந்தது - வரலாறு படைக்கும் முயற்சி தோல்வி
x

'ரஷீத்' ரோவர் நிலவில் மோதி நொறுங்கியிருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

டோக்கியோ,

ஜப்பானைச் சேர்ந்த 'ஐஸ்பேஸ்'(ispace) என்ற தனியார் நிறுவனம் 'ஹகுடோ-ஆர் மிஷன் 1' என்ற திட்டத்தின் மூலம் நிலவில் விண்கலத்தை தரையிறக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இதற்கு முன்பு நிலவில் தனியார் விண்கலங்கள் எதுவும் தரையிறங்கியது இல்லை. அந்த வகையில் இதுவே நிலவில் தரையிறங்கப் போகும் முதல் தனியார் விண்கலம் என்ற சாதனையை படைக்க இருந்தது.

இந்த 'ஹகுடோ-ஆர்' விண்கலம் கடந்த டிசம்பர் மாதம் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் 'ஃபால்கான் 9' ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இது கடந்த மாதம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது. இந்த விண்கலத்தில் ஐக்கிய அமீரகத்தின் 'ரஷீத்'ரோவர் பொருத்தப்பட்டிருந்தது. இந்த ரோவர் நிலவில் தரையிறங்கி ஆய்வு பணிகளை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

நிலவின் தரைப்பரப்பில் இருந்து சுமார் 100 கி.மீ. உயரத்தில் 'ஹகுடோ-ஆர்' விண்கலம் நிலவை சுற்றி வந்த நிலையில், நேற்று இரவு 10 மணியளவில் 'ரஷீத்' ரோவர் நிலவில் தரையிறங்க தொடங்கியது. ஆனால் நிலவில் தரையிறங்குவதற்கு 25 நிமிடங்களுக்கு முன் விண்கலத்தின் சிக்னல் துண்டிக்கப்பட்டது. தரைக்கட்டுப்பாட்டு தளத்துடன் விண்கலம் தொடர்பை இழந்த நிலையில், 'ரஷீத்' ரோவர் நிலவில் மோதி நொறுங்கியிருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால் நிலவில் தரையிறங்கப் போகும் முதல் தனியார் விண்கலம் என்ற சாதனை முயற்சி தோல்வியில் முடிந்தது.


1 More update

Next Story