"போலந்தில் விழுந்த ஏவுகணை குறித்த தரவுகளை தர வேண்டும்" - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை


போலந்தில் விழுந்த ஏவுகணை குறித்த தரவுகளை தர வேண்டும் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை
x

போலந்தில் விழுந்த ஏவுகணை ரஷிய ஏவுகணைகளை தாக்கி அழிக்க உக்ரைன் படைகளால் வீசப்பட்டதாக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கீவ்,

அமெரிக்கா, கனடா மற்றும் 28 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. 9 மாதங்கள் ஆகியும் இந்த போர் முடிவில்லாமல் நீண்டு கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் நேற்று உக்ரைனின் அண்டை நாடான போலந்தில் ஏவுகணை விழுந்து வெடித்தது. ஏவுகணையை வீசியது ரஷியாதான் என்பது இன்னும் உறுதியாகாத நிலையில், இது தொடர்பாக போலந்து நாட்டுக்கான ரஷிய தூதரகத்துக்கு போலந்து அரசு சம்மன் அனுப்பியது.

எனினும் இந்த சம்பவத்துக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என ரஷியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. அதே சமயம் போலந்தில் விழுந்த ஏவுகணை ரஷிய ஏவுகணைகளை தாக்கி அழிக்க உக்ரைன் படைகளால் வீசப்பட்ட ஏவுகணையாக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அனைத்து விவரங்கள் மற்றும் உண்மைகளை அறிய விரும்புவதாகவும், போலந்தில் விழுந்த ஏவுகணை குறித்த அனைத்து தரவுகளையும் தர வேண்டும் எனவும் நட்பு நாடுகளுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story