உக்ரைன் போர்; ரஷியாவுக்கு உதவினால் கடும் விலை கொடுக்க வேண்டி இருக்கும்: ஜி-7 நாடுகள் எச்சரிக்கை


உக்ரைன் போர்; ரஷியாவுக்கு உதவினால் கடும் விலை கொடுக்க வேண்டி இருக்கும்: ஜி-7 நாடுகள் எச்சரிக்கை
x

உக்ரைன் போரில் ரசாயனம், அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் கடுமையான விளைவுகளை ரஷியா சந்திக்க வேண்டி இருக்கும் என ஜி-7 நாடுகள் கூட்டாக எச்சரிக்கை விடுத்து உள்ளன.

டோக்கியோ,

ஜப்பான் நாட்டில் கரூய்ஜவா நகரில் ஜி-7 நாடுகளை சேர்ந்த வெளியுறவு மந்திரிகள் கலந்து கொண்ட 2 நாள் மாநாடு நடந்தது. இதில் ஜி-7 உறுப்பு நாடுகளான இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் முக்கிய தலைவர்களுடன் ஐரோப்பிய யூனியன் அமைப்பும் கூட்டத்தில் பங்கேற்றன.

இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன் பின்னர் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அதில், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு ஆயுதங்களை வழங்கும் 3-வது நபரை தடுக்கும் வகையில் நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம். உக்ரைன் போருக்கு ஆதரவு தெரிவிப்போருக்கு எதிராக தொடர்ந்து நாங்கள் நடவடிக்கைகளை எடுப்போம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சமீபத்தில், பெலாரஸ் நாட்டு எல்லை அருகே அணு ஆயுதங்களை குவிக்க ரஷியா முடிவு செய்து உள்ளது என தகவல் வெளியானது. ரஷிய தூதர் வெளியிட்ட இந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. ரஷிய அதிபரும் அதனை மேற்கோள் காட்டி பேசி இருந்தது உலக நாடுகள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இதற்கும் உறுப்பு நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. உக்ரைன் மீது நடத்தப்படும் போரானது ஒரு தீவிர சர்வதேச சட்ட விதிமீறலை ஏற்படுத்தி உள்ளது என குறிப்பிட்டதுடன், உக்ரைனில் இருந்து உடனடியாகவும், நிபந்தனையின்றியும் அனைத்து படைகள் மற்றும் தளவாடங்களை ரஷியா திரும்ப பெற வேண்டும் என மீண்டும் வலியுறுத்தி உள்ளது.

உக்ரைன் போரில் ரசாயனம், உயிரி ஆயுதங்கள் மற்றும் அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் கடுமையான விளைவுகளை ரஷியா சந்திக்க வேண்டி இருக்கும் என்று ஜி-7 நாடுகள் கூட்டாக எச்சரிக்கை விடுத்து உள்ளன.

இதேபோன்று ஆப்கானிஸ்தான் விவகாரம், ரஷியாவின் படையெடுப்பு உள்பட மண்டல அளவிலான சவால்களை எதிர்கொள்ளும் மத்திய ஆசிய நாடுகளுடன் இணைந்து பணியாற்றவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்து உள்ளது.

தைவான் பகுதியில் அமைதி, பாதுகாப்பு என்பது தவிர்க்க முடியாத விசயம் என ஒப்பு கொண்டதுடன், சர்வதேச சமூகத்தில் ஒரு பொறுப்புள்ள உறுப்பினராக செயல்படும்படி சீனாவையும் கேட்டு கொண்டு உள்ளது.


Next Story