ஏமனில் உள்ள ஹவுதி இலக்குகள் மீது புதிய தாக்குதல்களை நடத்திய அமெரிக்கா


ஏமனில் உள்ள ஹவுதி இலக்குகள் மீது புதிய தாக்குதல்களை நடத்திய அமெரிக்கா
x

ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகளை குறிவைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது.

வாஷிங்டன்,

ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு ஆதரவு அளித்து வருகிறது. இதன்படி செங்கடல் வழியாக இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கு செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகளை குறிவைத்து அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து சமீபத்தில் அதிரடியாக வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

செங்கடலில் நிலவும் பதட்டங்களுக்கு மத்தியில், 14 ஹவுதி நிலைகளை குறிவைத்து அமெரிக்கப் படைகள் நேற்று அதிரடி தாக்குதல்களை நடத்தியது, அவை ஏமனில் ஹவுதிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தாக்குதல் நடத்துவதற்காக ஏவப்பட்டவை என கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) தனது எக்ஸ் வலைதளத்தில், "இந்த ஏவுகணைகள் எந்த நேரத்திலும் சுடப்பட்டிருக்கலாம், அமெரிக்கப் படைகள் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான உரிமை மற்றும் கடமையைப் பயன்படுத்தத் தூண்டுகிறது.

இந்த தாக்குதல்கள் செங்கடல், பாப்-எல்-மண்டேப் ஜலசந்தி மற்றும் ஏடன் வளைகுடாவில் சர்வதேச மற்றும் வர்த்தக கப்பல் போக்குவரத்து மீதான அவர்களின் பொறுப்பற்ற தாக்குதல்களை தடுப்பது மற்றும் ஹவுதிகளின் திறனைக் குறைப்பதற்காகவே" என்று பதிவிடப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்க மத்திய கட்டளை கமாண்டர் ஜெனரல் மைக்கேல் எரிக் குரில்லா, "ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் சர்வதேச கடற்படையினருக்கு தொடர்ந்து ஆபத்தை ஏற்படுத்துகின்றன. தெற்கு செங்கடல் மற்றும் அதை ஒட்டிய நீர்வழிகளில் வணிக கப்பல் பாதைகளை சீர்குலைக்கிறது. அப்பாவி கடற்படையினரின் உயிரைப் பாதுகாக்க நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம், நாங்கள் எப்போதும் எங்கள் மக்களைப் பாதுகாப்போம்" என்று அவர் கூறினார்.


Next Story