2வது டெஸ்ட் போட்டி; வங்காளதேசத்திற்கு 511 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை


2வது டெஸ்ட் போட்டி; வங்காளதேசத்திற்கு 511 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை
x

Image Courtesy: AFP 

இலங்கை அணி தரப்பில் மேத்யூஸ் 56 ரன்கள் எடுத்தார்.

சட்டோகிராம்,

வங்காளதேசம், இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் சட்டோகிராமில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தது .முதல் இன்னிங்சில் இலங்கை 531 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

அந்த அணியில் குசால் மெண்டிஸ் 93 ரன்னும், கமிந்து மெண்டிஸ் 92 ரன்னும், கருணரத்னே 86 ரன்னும், தனஞ்செய டி சில்வா 70 ரன்னும், சண்டிமால் 59 ரன்னும், நிஷான் மதுஷ்கா 57 ரன்னும் எடுத்தனர். வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்டும், ஹசன் மெஹ்மூத் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதையடுத்து, முதல் இன்னிங்சை விளையாடிய வங்காளதேச அணி இலங்கையின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 178 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக சகீர் ஹசன் 54 ரன்கள் அடித்தார். இலங்கை தரப்பில் அதிகபட்சமாக அசிதா பெர்னண்டோ 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் 353 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்து 455 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. மேத்யூஸ் 39 ரன்களுடனும், பிரபாத் ஜெயசூர்யா 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இன்றூ 4ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய இலங்கை அணி தனது 2வது இன்னிங்சில் 40 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இலங்கை அணி 510 ரன்கள் முன்னிலை பெற்றது. இலங்கை அணி தரப்பில் மேத்யூஸ் 56 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 511 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி தனது 2வது இன்னிங்சை ஆடி வருகிறது. வங்காளதேசம் தரப்பில் மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கி ஆடி வருகின்றனர்.


Next Story