3வது ஒருநாள் போட்டி; ஜனித் லியனகே அபார சதம் - வங்காளதேசத்திற்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை


3வது ஒருநாள் போட்டி; ஜனித் லியனகே அபார சதம் - வங்காளதேசத்திற்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை
x

Image Courtesy: AFP 

இலங்கை அணி தரப்பில் அபாரமாக ஆடிய ஜனித் லியனகே சதம் அடித்து அசத்தினார்.

சட்டோகிராம்,

இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் இரு ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்று தொடர் 1-1 என சமனில் உள்ளது. இந்நிலையில் ஒருநாள் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசாங்கா மற்றும் அவிஷ்கா பெர்ணாண்டோ ஆகியோர் களம் இறங்கினர். இதில் நிசாங்கா 1 ரன்னிலும், பெர்ணாண்டோ 4 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இதையடுத்து களம் இறங்கிய குசல் மெண்டிஸ் 29 ரன், சமரவிக்ரமா 14 ரன் எடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து அசலங்கா மற்றும் ஜனித் லியனகே இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதில் அசலங்கா 37 ரன் எடுத்து அவுட் ஆனார்.

இதனால் இலங்கை அணி 154 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து ஜனித் லியனகே ஒருபுறம் நிலைத்து நின்று ஆடினார். அவர் அரைசதம் அடித்து அசத்தினார். ஆனால் மறுமுனையில் களம் இறங்கிய வெல்லாலகே 1 ரன், ஹசரங்கா 11 ரன், தீக்சனா 15 ரன் எடுத்து அவுட் ஆகினர்.

மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ஜனித் லியனகே சதம் அடித்து அசத்தினார். இறுதியில் இலங்கை அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 235 ரன்கள் சேர்த்தது. வங்காளதேச அணி தரப்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 236 ரன்கள் எடுத்தால் தொடரை கைப்பற்றலாம் என்ற நிலையில் வங்காளதேச அணி ஆட உள்ளது.


Next Story