3வது டெஸ்ட்; ரன் குவிப்பில் மிரட்டும் இந்தியா - 3ம் நாள் முடிவில் 322 ரன்கள் முன்னிலை


3வது டெஸ்ட்; ரன் குவிப்பில் மிரட்டும் இந்தியா - 3ம் நாள் முடிவில் 322 ரன்கள் முன்னிலை
x

Image Courtesy: AFP

அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 133 பந்துகளில் 104 ரன்கள் எடுத்த நிலையில் முதுகுவலி காரணமாக (ரிட்டையர் ஹர்ட்) மூலம் வெளியேறினார்.

ராஜ்கோட்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோகித், ஜடேஜாவின் அபார சதம் மற்றும் அறிமுக வீரர் சர்பராஸ் கானின் அரை சதத்தின் உதவியுடன் முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2-வது நாளில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 207 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடி சதமடித்து அசத்திய பென் டக்கெட் 133 ரன்களுடனும், ஜோ ரூட் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர் .

3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் ரூட் 18 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த ஜானி பேர்ஸ்டோ ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அதன்பின் பென் டக்கெட் , ஸ்டோக்ஸ் இருவரும் சிறிது நேரம் நிலைத்து விளையாடினர். இதில் பென் டக்கெட் 153 ரன்களிலும், ஸ்டோக்ஸ் 41 ரன்களிலும் வெளியேறினர். இறுதியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 319 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட்டுகள், குல்தீப் யாதவ், ஜடேஜா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

தொடர்ந்து 126 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா19 ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார் இதன் பின் ஜெய்ஸ்வால் - சுப்மன் கில் ஜோடி சேர்ந்து இங்கிலாந்தின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். மறுமுனையில் சுப்மன் கில் அரைசதம் அடித்து அசத்தினார். அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 133 பந்துகளில் 104 ரன்கள் எடுத்த நிலையில் முதுகுவலி காரணமாக ரிட்டையர் ஹர்ட் மூலம் வெளியேறினார். இதையடுத்து களம் இறங்கிய ரஜத் படிதார் டக் அவுட் ஆனார். இதையடுத்து குல்தீப் யாதவ் களம் இறங்கினார்.

இறுதியில் 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி தனது 2வது இன்னிங்சில் 51 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 196 ரன்கள் எடுத்துள்ளது. இந்த ரன்னையும் சேர்த்து இந்தியா இதுவரை 322 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்தியா தரப்பில் சுப்மன் கில் 65 ரன்னுடனும், குல்தீப் 3 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். நாளை 4ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.


Next Story