இங்கிலாந்துக்கு எதிரான வெற்றி...எங்களுக்கு ஆதரவு அளித்த அனைத்து ரசிகர்களுக்கும் மிகப்பெரிய நன்றி - முஜீப் உர் ரஹ்மான்


இங்கிலாந்துக்கு எதிரான வெற்றி...எங்களுக்கு ஆதரவு அளித்த அனைத்து ரசிகர்களுக்கும் மிகப்பெரிய நன்றி - முஜீப் உர் ரஹ்மான்
x

Image Courtesy: @Mujeeb_R88

தினத்தந்தி 17 Oct 2023 10:44 AM GMT (Updated: 17 Oct 2023 10:47 AM GMT)

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

டெல்லி,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 15-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான் 69 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முஜீப், ரஷீத் கான், முகமது நபி ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் இங்கிலாந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தோல்வி அடைந்தது.

இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்ற பின்னர் பவுண்டரி எல்லையிலிருந்து பந்தை எடுத்துப் போடும் சிறுவர்களில் ஒரு பையன் முஜீப் உர் ரகுமானை கட்டிப்பிடித்து தேம்பித் தேம்பி அழுதார். குறிப்பாக தமக்கு மிகவும் பிடித்த ஆப்கானிஸ்தான் அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்த ஆனந்தத்தில் அழுத அந்த சிறுவனை நெகிழ்ச்சியடைந்து முஜீப்பும் கட்டிப்பிடித்து கண்களை துடைத்தார்.

மேலும் அந்த சிறுவனுக்கு சாக்லேட்டை பரிசளித்து தண்ணீர் குடிக்க வைத்து முஜீப் அழுகையை நிறுத்தி அன்பை காட்டியது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் அந்த சிறுவன் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் அல்ல இந்தியாவைச் சேர்ந்தவர் என்று தெரிவித்துள்ள முஜீப் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் தங்களுக்கு பெரிய ஆதரவு கொடுத்த இந்திய ரசிகர்களுக்கு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில்,

அது ஆப்கானிஸ்தான் பையன் கிடையாது. இளம் இந்திய பையன். டெல்லியைச் சேர்ந்த இந்த இந்திய பையனை வெற்றிக்கு பின் பார்த்ததில் மகிழ்ச்சியடைகிறேன் (கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டல்ல உணர்வாகும்).

மேலும் கடந்த இரவில் எங்களுக்கு அற்புதமான ஆதரவு கொடுத்த அனைத்து ரசிகர்களுக்கும் மிகப்பெரிய நன்றி. இந்த ஆதரவுகளுக்கு நாங்கள் நன்றியுடையவர்களாக இருக்கிறோம். இதே ஆதரவுக்காக நாங்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறோம். அன்பை கொடுத்ததற்கு நன்றி டெல்லி. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story