ஹர்திக், குல்தீப் யாதவ் பந்துவீச்சு குறித்து கேப்டன் ரோகித் சர்மா புகழாரம்


ஹர்திக், குல்தீப் யாதவ் பந்துவீச்சு குறித்து கேப்டன் ரோகித் சர்மா புகழாரம்
x

ஹர்திக் பாண்ட்யா சில ஆண்டுகளாக உண்மையிலேயே கடினமாக உழைத்து இருக்கிறார் என்று ரோகித் சர்மா தெரிவித்தார்.

கொழும்பு,

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறிய இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 213 ரன்களே எடுத்த போதிலும் அதை வைத்து எதிரணியை மடக்கி 41 ரன்கள் வித்தியாசத்தில் அட்டகாசமான ஒரு வெற்றியை ருசித்தது. இதன் பின்னர் இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது;-

"ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா (5 ஓவரில் 14 ரன்னுக்கு ஒரு விக்கெட்) பந்துவீசிய விதம் மிகவும் திருப்தி அளித்தது. தனது பந்து வீச்சை மேம்படுத்த அவர் கடந்த சில ஆண்டுகளாக உண்மையிலேயே கடினமாக உழைத்து இருக்கிறார். அவர் வீசிய ஒவ்வொரு பந்தும் விக்கெட் வீழ்த்துவது போன்றே தெரிந்தது. 213 ஸ்கோரை வைத்து எதிரணியை கட்டுப்படுத்துவது சுலபமானது அல்ல. ஆடுகளமும் போக போக பேட்டிங்குக்கு நன்றாக இருந்தது.

அதனால் நாங்கள் நெருக்கடிக்குள்ளாகாமல் தொடர்ந்து சீராக பந்து வீச வேண்டி இருந்தது. அதை கச்சிதமாக செய்து முடித்தோம். இதே போல் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவும் (4 விக்கெட்) பிரமாதமாக பந்து வீசினார். தனது சிறந்த நிலையை அடைவதற்காக அவரும் கடின உழைப்பை போட்டுள்ளார். அதற்குரிய பலனை அவர் விளையாடிய கடந்த 15 ஆட்டங்களில் நாம் பார்த்துள்ளோம். இது அணிக்கு நல்ல அறிகுறியாகும்."

இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்தார்.


Next Story