உலகக்கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச முடிவு


உலகக்கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச முடிவு
x
தினத்தந்தி 29 Oct 2023 8:08 AM GMT (Updated: 29 Oct 2023 8:11 AM GMT)

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.

லக்னோ,

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் லக்னோவில் இன்று நடைபெறும் 29-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

இதில், இந்தியா விளையாடிய 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 10 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து விளையாடிய 5 ஆட்டங்களில் ஒரு வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இந்திய அணியில் பேட்டிங்கில் விராட்கோலி (354 ரன்கள்), ரோகித் சர்மா (311 ரன்கள்), லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், சுப்மன் கில்லும், பந்து வீச்சில் பும்ரா (11 விக்கெட்), குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், முகமது ஷமியும் நல்ல நிலையில் உள்ளனர். கணுக்காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீளாததால் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இந்த ஆட்டத்திலும் ஆடவில்லை.

நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி தனது முதல் 5 ஆட்டங்களில் ஒரு வெற்றி (வங்காளதேசத்துக்கு எதிராக), 4 தோல்வி (நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை அணிகளிடம்) கண்டு ஏறக்குறைய அரைஇறுதி வாய்ப்பை இழந்து விட்டது. அந்த அணி எஞ்சிய ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றாலும், மற்ற அணிகளுக்குரிய முடிவு ஒருசேர சாதகமாக அமைந்தால் மட்டுமே சிறிய வாய்ப்பு கிட்டும்.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாசில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.


Next Story