முதல் டெஸ்ட்; விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் வங்காளதேசம் - 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 47/5


முதல் டெஸ்ட்; விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் வங்காளதேசம் - 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 47/5
x

Image Courtesy: AFP

இலங்கை தரப்பில் விஷ்வா பெர்னாண்டோ 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

சில்ஹெட்,

இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கையும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்காளதேசமும் கைப்பற்றின. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சில்ஹெட்டில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை 280 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக தனஞ்சயா டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் சதமடித்து அசத்தினர். வங்காளதேச அணி தரப்பில் அதிகபட்சமாக கலீத் அகமது மற்றும் நஹித் ராணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம், இலங்கை அணியின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 188 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக தைஜுல் இஸ்லாம் 47 ரன்கள் அடித்தார். இலங்கை தரப்பில் விஷ்வா பெர்னண்டோ 4 விக்கெட்டுகளும், கசூன் ரஜிதா மற்றும் லஹிரு குமாரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர். இதையடுத்து 92 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் 3ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.

இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய இலங்கை அணி 110.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 418 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில் சிறப்பாக ஆடிய கமிந்து மெண்டிஸ் 164 ரன்னும், டி சில்வா 108 ரன்னும் எடுத்தனர். வங்காளதேசம் தரப்பில் மெஹதி ஹசன் மிராஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 511 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் அணி தனது 2வது இன்னிங்சை ஆடியது. வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மஹ்முதுல் ஹசன் ஜாய் மற்றும் ஜாகிர் ஹசன் களம் இறங்கினர்.

இதில் மஹ்முதுல் ஹசன் ஜாய் 0 ரன், ஜாகிர் ஹசன் 19 ரன் எடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய நஜ்முல் ஹொசைன் சாண்டோ 6 ரன், ஷஹாதத் ஹொசைன் திபு 0 ரன், லிட்டன் தாஸ் 0 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

இறுதியில் 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேசம் 47 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. வங்காளதேசம் தரப்பில் மொமினுல் ஹக் 7 ரன்னுடனும், தைஜூல் இஸ்லாம் 6 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை தரப்பில் விஷ்வா பெர்னாண்டோ 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். வங்காளதேசத்தின் வெற்றிக்கு இன்னும் 464 ரன்கள் தேவைப்படுகிறது.

அதேவேளையில் இலங்கையின் வெற்றிக்கு இன்னும் 5 விக்கெட்டுகளே தேவைப்படுவதால் இந்த ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. நாளை 4ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.


Next Story