முதல் டெஸ்ட்; இரட்டை சதத்தை தவறவிட்ட போப்...இந்தியாவுக்கு 231 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த இங்கிலாந்து


முதல் டெஸ்ட்; இரட்டை சதத்தை தவறவிட்ட போப்...இந்தியாவுக்கு 231 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த இங்கிலாந்து
x

Image Courtesy: AFP

தினத்தந்தி 28 Jan 2024 6:03 AM GMT (Updated: 28 Jan 2024 6:06 AM GMT)

இங்கிலாந்து அணி தரப்பில் போப் 196 ரன்கள் அடித்தார்.

ஐதராபாத்,

இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 246 ரன்கள் எடுத்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி ஜெய்ஸ்வால், ராகுல், ஜடேஜா ஆகியோரின் அரைசதத்துடன் 436 ரன்கள் எடுத்தது.

190 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 316 ரன்கள் எடுத்து 126 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. போப் 148 ரன்களும், ரெகன் அகமது 16 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இந்நிலையில் 4ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.

இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியில் ரெகன் அகமது 28 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய டாம் ஹார்ட்லி 34 ரன்களிலும், மார்க் வுட் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய போப் இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 196 ரன் எடுத்து கடைசி விக்கெட்டாக அவுட் ஆனார்.

இறுதியில் இங்கிலாந்து அணி தனது 2வது இன்னிங்சில் 102.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 420 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 230 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து 231 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி ஆட உள்ளது.


Next Story