தோனி கேப்டனாக இருக்கும்போதே தலைமை பண்பு கோலியிடம் இருந்ததை பார்த்தேன் - ரவி சாஸ்திரி


தோனி கேப்டனாக இருக்கும்போதே தலைமை பண்பு கோலியிடம் இருந்ததை பார்த்தேன் - ரவி சாஸ்திரி
x
தினத்தந்தி 11 Feb 2024 6:14 AM GMT (Updated: 11 Feb 2024 6:20 AM GMT)

விராட் கோலி, தன்னை டெஸ்ட் கிரிக்கெட்டில் முழுமையாக ஆர்வத்துடன் ஈடுபடுத்திக் கொண்டவர் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

மும்பை,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் ஆளுக்கு ஒன்று வெற்றி பெற்ற நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இதில் ஐதராபாத் நகரில் நடைபெற்ற இத்தொடரின் முதல் போட்டியில் 190 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்த இந்தியா கடைசி நேரத்தில் சொதப்பலாக விளையாடி தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அந்த தோல்விக்கு ரோகித் சர்மாவின் சுமாரான கேப்டன்ஷிப் முக்கிய காரணமாக அமைந்ததாக நிறைய விமர்சனங்கள் எழுந்தன.

மேலும் ஒருவேளை அப்போட்டியில் விராட் கோலி கேப்டனாக இருந்திருந்தால் இந்தியா தோல்வியை சந்தித்திருக்காது என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அந்தளவுக்கு விராட் கோலி மகத்தான டெஸ்ட் கேப்டனாக போற்றப்படுகிறார்.

ஏனெனில் தோனி விலகிய நிலையில், 2014-ம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்றபோது தரவரிசையில் 7-வது இடத்தில் திண்டாடிய இந்தியாவை தன்னுடைய ஆக்ரோஷமான கேப்டன்ஷிப் வாயிலாக 2016 - 2021 வரை 5 வருடங்கள் உலகின் நம்பர் 1 அணியாக ஜொலிக்க வைத்த விராட் கோலி ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்தார்.

இந்நிலையில் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக சாதனை படைத்துள்ள விராட் கோலியிடம், தோனி கேப்டனாக இருந்தபோதே இந்தியாவுக்கு தலைமை தாங்கும் பண்புகள் இருந்ததை பார்த்ததாக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;-

"இந்திய அணியில் நிறைய தனிப்பட்ட புத்திசாலித்தனம் இருந்தது. ஆனால் நான் அணியின் திறமையை பார்க்க விரும்பினேன். நான் வெற்றி பெறவும் டெஸ்ட் கிரிக்கெட்டை முதன்மை படுத்தவும் விரும்பினேன். அந்த நேரத்தில் விராட் கோலி பட்டை தீட்டப்படாத வைரத்தின் அடையாளமாக இருப்பதை கண்டேன். தோனி என்னுடைய கேப்டனாக இருந்தபோதே நான் விராட் கோலியை அந்த இடத்தில் வைத்து பார்த்தேன்.

நான் பொறுப்பேற்ற 2-வது மாதத்திலேயே அவரிடம் கேப்டன்ஷிப் செய்வதற்கு தயாராக இருங்கள் என்று சொன்னேன். விராட் கோலி தன்னை டெஸ்ட் கிரிக்கெட்டில் முழுமையாக ஆர்வத்துடன் ஈடுபடுத்திக் கொண்டவர். மிகவும் கடினமான கிரிக்கெட்டை விளையாடுவதற்கு தயாராக இருந்த அவர் ஆஸ்திரேலியா அல்லது பாகிஸ்தான் என எங்கே விளையாடினாலும் புகார் சொல்வதற்கோ சாக்கு செல்வதற்கோ இடமில்லை என்ற அணுகுமுறையை கையாண்டார். நாங்கள் வேகப்பந்து வீச்சாளர்களை விரும்பினோம்" என்று கூறினார்.


Next Story