இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட்; பரபரப்பான சூழலில் நாளை 4-வது நாள் ஆட்டம்


இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட்; பரபரப்பான சூழலில் நாளை 4-வது நாள் ஆட்டம்
x

image courtesy; twitter/@BCCI

தினத்தந்தி 4 Feb 2024 11:34 AM GMT (Updated: 4 Feb 2024 12:53 PM GMT)

இந்திய அணி தனது 2-வது இன்னிங்சில் 255 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

விசாகப்பட்டினம்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 396 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 253 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

பின்னர் 143 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி சுப்மன் கில் சதத்தின் உதவியுடன் 255 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 399 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது இந்தியா.

399 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 3-வது நாளில் 1 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் அடித்துள்ளது. ஜாக் கிராலி 29 ரன்களுடனும், ரெஹான் அகமது 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 1 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இங்கிலாந்து வெற்றி பெற 332 ரன்கள் தேவைப்படும் நிலையில், இந்தியா வெற்றி பெற 9 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும்.

இத்தகைய பரபரப்பான சூழலில் நாளை 4-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.


Next Story