எங்கள் அணியின் பீல்டிங் மோசமாக இருந்தது - தோல்விக்கு காரணம் சொன்ன ருதுராஜ்


எங்கள் அணியின் பீல்டிங் மோசமாக இருந்தது - தோல்விக்கு காரணம் சொன்ன ருதுராஜ்
x

Image Courtesy: AFP

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றது.

அகமதாபாத்,

ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 231 ரன்கள் குவித்தது.

குஜராத் தரப்பில் சுப்மன் கில் 104 ரன்னும், சாய் சுதர்சன் 103 ரன்னும் எடுத்தனர். சென்னை தரப்பில் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 232 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் குஜராத் அணி 35 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் 63 ரன்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் மொகித் ஷர்மா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்நிலையில் இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்த பின்னர் சென்னை கேப்டன் ருதுராஜ் அளித்த பேட்டியில் கூறியதாவது,

எங்கள் அணியின் பீல்டிங் மோசமாக இருந்தது. மிகவும் எளிதாக 10 முதல் 15 ரன்களை பீல்டிங்கில் விட்டுக் கொடுத்துவிட்டோம். திட்டங்களின் படி சரியாக செயல்பட்டோம். ஆனால் குஜராத் அணி மிகச்சிறப்பாக செயல்பட்டனர். அதிலும் சுப்மன் கில், சாய் சுதர்சன் இருவரும் தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்கள்.

இந்த பிட்சில் ரன்களை கட்டுப்படுத்துவது எளிதாக இல்லை. நாங்களும் விக்கெட் வீழ்த்த தவறிவிட்டோம். அவர்கள் இருவருமே நல்ல கிரிக்கெட் ஷாட்களை ஆடி ரன்களை சேர்த்தார்கள். அடுத்த போட்டியை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளோம்.

நிச்சயம் சிறந்த அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெறும் அந்த போட்டி எளிதாக இருக்காது. நாளை மறுநாள் (நாளை) போட்டி என்பதால், ஓய்வுக்கு கூட நேரம் இருக்காது. அதிலும் இரவு போட்டியாக இல்லாமல் பகல் போட்டியாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story