"சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது..."-ஷாஹித் அப்ரிடி


சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது...-ஷாஹித் அப்ரிடி
x

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்த தயாராக உள்ளது என ஷாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

லாகூர்,

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. முதலில் இந்த தொடர் முழுவதும் பாகிஸ்தானில் நடைபெற இருந்தது. ஆனால் இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நிலவும் பிரச்சினை காரணமாக இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல தயக்கம் காட்டியது. இந்தத் தயக்கம் பாகிஸ்தானில் நிலவும் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைமை தொடர்பான கவலைகளால் உருவானது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா கூறினார்.

மேலும் தொடரை பாகிஸ்தானில் இருந்து மாற்றக்கோரி ஆசிய கிரிக்கெட் வாரியத்திடம் பிசிசிஐ சார்பில் கோரிக்கையும் வைக்கப்பட்டது. இதனையடுத்து பாகிஸ்தானில் நடைபெற இருந்த 9 போட்டிகள் இலங்கைக்கு மாற்றப்பட்டு தொடர் நடைபெற்று வருகிறது.

பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக பிசிசிஐ-ன் செயலாளர் ஜெய் ஷாவின் கவலைக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி, கடந்த ஆறு ஆண்டுகளில் பாகிஸ்தானில் வெளிநாட்டு அணிகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய தொடர்களை குறிப்பிட்டு பேசியுள்ளார். மேலும் 2025-ல் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக தனது எக்ஸ் (முன்பு டுவிட்டர்) தளத்தில் "எந்த சந்தேகமும் வேண்டாம் மிஸ்டர் ஷா, 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்த தயாராக உள்ளது," என்று பதிவிட்டுள்ளார்.


Next Story